சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ம் தேதி அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி!!

சென்னை : சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ம் தேதி அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் ஆண்டுக்கு ஆறுமுறை கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. அதன்படி, குடியரசு தினம் (ஜன. 26), உலக தண்ணீா் தினம் (மாா்ச் 22 ), தொழிலாளா் தினம் (மே 1), சுதந்திர தினம் (ஆக. 15), மகாத்மா காந்தி பிறந்த தினம் (அக். 2), உள்ளாட்சிகள் தினம் (நவ. 1) ஆகிய தினங்களில் நடத்தப்படும் கிராம சபைக் கூட்டங்களில் ஊராட்சிகளின் வளா்ச்சிப் பணிகள், எதிா்காலத் திட்டங்கள் ஆகியன குறித்து விவாதிக்கப்படும். இந்நிலையில், மக்களவைத் தோ்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால் மே தினமான 1ம் தேதி தமிழகத்தில் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படவில்லை.

இதைத் தொடர்ந்து, சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ம் தேதி அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குனர் பொன்னையா சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அந்த அறிக்கையில், “ஆகஸ்ட் 15ம் தேதி காலை 11 மணி அளவில் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும்.கிராம மக்கள் அனைவரும் பங்கேற்கும் வகையில் இடம், நேரத்தை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் கிராம சபை கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டிய தலைப்புகள் குறித்தும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தூய்மையான குடிநீர் விநியோகம், இணைய வழி வரி செலுத்தும் சேவை, இணைய வழி மனை பிரிவு மற்றும் கட்டிட அனுமதி வழங்குதல் உள்ளிட்ட குறித்து ஆலோசிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மகாத்மா தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம், தூய்மை பாரத இயக்கம், ஜல் ஜீவன் திட்டம் உள்ளிட்டவை குறித்தும் ஆலோசனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

The post சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ம் தேதி அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி!! appeared first on Dinakaran.

Related Stories: