சார்ஜ் போட்டபோது வந்தே பாரத் ரயிலில் செல்போன் வெடித்தது: புகைமூட்டத்தால் பயணிகள் அலறல்

ஜோலார்பேட்டை: வாணியம்பாடி அருகே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் சார்ஜ் போட்ட செல்போன் திடீரென வெடித்ததில் ரயில் பெட்டியில் புகை சூழ்ந்தது. பயணிகள் அலறியதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையில் இருந்து வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று காலை மைசூர் சென்று கொண்டிருந்தது. அப்போது முன்பதிவு செய்யப்பட்ட சி11 கோச்சில் பயணம் செய்த குஷ்நாத்கர் (31) என்ற பயணி தனது செல்போனை சார்ஜரில் போட்டு இருந்தார்.

ரயில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ரயில் நிலையத்தை கடந்தபோது அதிக வெப்பம் காரணமாக செல்போன் திடீரென வெடித்தது. இதனால் செல்போன் எரிந்து அந்த பெட்டியில் புகை சூழ்ந்தது. அதில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக ரயில் வாணியம்பாடி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. இதற்கிடையே சி11, சி 12 பெட்டிகளில் செல்போன் வெடித்த புகை சூழ்ந்ததால் பயணிகள் அலறி கூச்சலிட்டனர். இதையடுத்து இரண்டு பெட்டிகளின் பிரதான கதவுகளைத் திறந்து ரயில்வே ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் புகையை அகற்றினர். அதன் பிறகு ரயில் அரை மணி நேரம் தாமதமாக மீண்டும் புறப்பட்டு சென்றது.

The post சார்ஜ் போட்டபோது வந்தே பாரத் ரயிலில் செல்போன் வெடித்தது: புகைமூட்டத்தால் பயணிகள் அலறல் appeared first on Dinakaran.

Related Stories: