சேலையூர் அருகே சோகம் தூக்க மாத்திரையை தவறுதலாக விழுங்கியதில் குழந்தை பரிதாப பலி: கையை பிளேடால் அறுத்து தாய் தற்கொலை முயற்சி

தாம்பரம்: சேலையூர் அருகே தூக்க மாத்திரையை தவறுதலாக விழுங்கியதில் 4 வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இதில் கையை பிளேடால் அறுத்து தாய் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். சேலையூர் அடுத்த சந்தோஷபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுதா என்பவரது மகள் அஸ்வினி (32). இவர் சிறுசேரியில் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது கணவர் குஜராத்தில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு ஹிரிதிவ் (7) என்ற மகனும், ஹார்த்ரா (4) என்ற மகளும் இருந்தனர்.

இந்நிலையில் மகன் ஹிரிதிவ் உடல்நிலை சரியில்லாமல் கடந்த ஜனவரி மாதம் உயிரிழந்ததான். இதனால் அஸ்வினி மன உளைச்சலில் தூக்கம் இல்லாமல் அவதிப்பட்டார். இதனால் மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் தூக்க மாத்திரைகளை அவர் பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தூங்க செல்வதற்கு முன்பு அஸ்வினி தூக்க மாத்திரைகளை அவரது படுகையின் அருகில் வைத்துவிட்டு கழிவறைக்கு சென்றுள்ளார்.

பின்னர் திரும்பி வந்த நிலையில் அவரது மகள் ஹார்த்ரா அந்த தூக்க மாத்திரையை தவறுதலாக சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இதனை அஸ்வினி கவனிக்கவில்லை. இதனையடுத்து தாய், மகள் இருவரும் தூங்கிவிட்டனர். இந்தநிலையில் நேற்று அதிகாலை சுமார் 4 மணியளவில் அஸ்வினி எழுந்து பார்த்தபோது குழந்தை ஹார்த்ரா வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்து கிடந்தாள். இதனைக்கண்டு அஸ்வினி கதறி அழுதார்.

ஏற்கனவே மகன் இறந்துவிட்ட நிலையில், மகளும் இறந்துவிட்டதால் அஸ்வினி மன அழுத்தத்துக்கு ஆளாகி தற்கொலை செய்ய முடிவெடுத்தார். அதன்படி கடிதம் எழுதி வைத்துவிட்டு அஸ்வினி தனது கணவருக்கு தகவல் தெரிவித்து, பின்னர் கழிவறைக்குச் சென்று பிளேடால் கையை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இந்நிலையில் காலை எப்போதும் போல குழந்தையை பள்ளிக்கு தயார் செய்வதற்காக குழந்தையின் பாட்டி சுதா வந்து பார்த்தபோது, குழந்தை வாயில் நுரை வந்தபடி இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் கழிவறையில் அஸ்வினியும் கையை அறுத்த நிலையில் மயங்கி கிடந்ததை பார்த்து பேரதிர்ச்சி அடைந்தார். சம்பவம் குறித்த தகவல் அறிந்த சேலையூர் காவல் நிலைய போலீசார் குழந்தையின் சடலத்தை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட அஸ்வினியை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு அஸ்வினி சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் குழந்தை தவறுதலாக தூக்க மாத்திரையை சாப்பிட்டதில் சந்தேகம் இருப்பதால் சந்தேக மரணம் என்ற அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post சேலையூர் அருகே சோகம் தூக்க மாத்திரையை தவறுதலாக விழுங்கியதில் குழந்தை பரிதாப பலி: கையை பிளேடால் அறுத்து தாய் தற்கொலை முயற்சி appeared first on Dinakaran.

Related Stories: