ஆண்டிபட்டி அருகே வேகத்தடையில் வேகமாக சென்ற அரசு டவுன்பஸ்: 2 பேர் காயம்

ஆண்டிபட்டி: ஆண்டிப்பட்டி அருகே வேகத்தடையில் வேகமாக இயக்கப்பட்ட அரசு டவுன் பஸ்சில் பயணம் செய்த சிறுவன் உள்பட 2 பேர் காயம் அடைந்தனர். தேனி மாவட்டம், ஏத்தக்கோவில் கிராமத்தில் இருந்து ஆண்டிப்பட்டி வழியாக பெரியகுளம் செல்லும் அரசு டவுன்பஸ் ஏத்தக்கோவிலில் இருந்து ஆண்டிபட்டி நோக்கி வந்து கொண்டிருந்தது. பஸ் ஆண்டிபட்டி ரயில்வே கேட் அருகே வந்த போது அங்கிருந்த வேகத்தடை மீது பஸ்சை அதிவேகமாக இயக்கியதால் பின்பகுதியில் அமர்ந்திருந்த பயணிகள் மேற்கூரை நோக்கி தூக்கி வீசப்பட்டனர். இதில் பஸ்சில் பயணித்த பலருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

இதில் ஆண்டிபட்டி அருகே மணியக்காரன்பட்டியைச் சேர்ந்த மேத்யூ (60) என்ற முதியவருக்கு காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இது தவிர ஒரு சிறுவனுக்கும் காயம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் பஸ்சை ஆண்டிபட்டி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லும் படி தகராறில் ஈடுபட்டனர். இதனால் பஸ் டிரைவர் பஸ்சை ஆண்டிபட்டி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றார். அங்கு வந்த போலீசார் காயம் அடைந்த இருவரையும் 108 ஆம்புலன்சில் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் ஆண்டிப்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

The post ஆண்டிபட்டி அருகே வேகத்தடையில் வேகமாக சென்ற அரசு டவுன்பஸ்: 2 பேர் காயம் appeared first on Dinakaran.

Related Stories: