கடக ராசிக்காரர்களின் இல்லக் கனவை நனவாக்கும் ஆலயம்

அடுக்கடுக்கான அலை பிறக்கும் கடல் வீடான கடக ராசிக்காரர்களான நீங்கள் கலையின் இருப்பிடமாகத் திகழ்வீர்கள். கட்டிடத்தின் முகப்பு முதல் காம்பவுண்ட் சுவர் வரை அலங்கரிப்பதில் அசகாய சூரர்கள். ‘‘வீடு என்றால் வசிப்பதற்கு மட்டுமல்ல; அது ஒரு கலைக்கூடம்’’ என்று சொல்வீர்கள். கட்டிடகாரகன் எனப்படும் சுக்கிரன்தான் உங்கள் வீட்டு யோகத்தை நிர்ணயிப்பார். அதாவது நீங்கள் கடக ராசியோ அல்லது கடக லக்னமோ, உங்களின் நாலாம் வீடானது துலாமாக வரும். அதற்கு அதிபதியாக சுக்கிரன் வருகிறார். எனவே, வீட்டை நிர்ணயிப்பதில் பெரும்பங்கு அவருக்குத்தான். அதனால்தானோ என்னவோ, அவ்வப்போது வீட்டை மீண்டும் மீண்டும் சரிசெய்து கொண்டிருப்பீர்கள். வீட்டின் வண்ணத்தை அடிக்கடி மாற்றாது தூங்க மாட்டீர்கள். கடக ராசியை சந்திரன்தான் ஆளுகிறார். நீங்கள் தேய்பிறை சந்திரனில் பிறந்திருந்தால் வீட்டை எளிமையாக வடிவமைப்பீர்கள். மின்விசிறி காற்றைவிட ஜன்னல் காற்றுக்குத்தான் முக்கியத்துவம் தருவீர்கள். அதுவே வளர்பிறை சந்திரனில் பிறந்திருந்தால், மழைநாளில்கூட மைல்டாக ஏசி வேண்டுமென விரும்புவீர்கள்.

மூன்று அறைகள் கொண்ட வீட்டைக் கட்டுவீர்கள். அதில் ஒரு ரூமை உபயோகப்படுத்தாமல், சும்மா உலாத்துவதற்காக வைத்திருப்பீர்கள். வீடா… தோட்டமா… என்று தெரியாத அளவுக்கு வீட்டைச் சுற்றிலும் தோட்டத்தை அமைப்பீர்கள். ஒண்டுக் குடித்தனத்தில் இருந்தால் கூட பூஞ்செடிகளை தொட்டியில் கட்டித் தொங்க விடுவீர்கள். இரண்டு செங்கல் இடம் கிடைத்தால் கூட பட்டு ரோஜாவை பதியன் போட்டு சிங்காரிப்பீர்கள். மீன் தொட்டி வைப்பீர்கள். வீட்டிற்குள் நிலா போன்ற அமைப்பில் படம் வரைவீர்கள். பாத்ரூமும், பெட்ரூமும் பெரிதாக இருக்க வேண்டுமென்று திட்டமிடுவீர்கள். ‘‘மாஸ்டர் பெட்ரூம் மாதிரி இருந்தால் நல்லாயிருக்கும்’’ என்று பில்டரிடம் சொல்லி வைப்பீர்கள்.

கடக ராசிக்குள் புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம் போன்ற நட்சத்திரங்கள் இடம்பெறுகின்றன. முதலில் புனர்பூசத்திற்கான வீட்டு யோகத்தைப் பார்ப்போம். கடக ராசியிலேயே வித்தியாசமானவர்கள் நீங்கள்தான். குருவின் ஆதிக்கத்தில் வரும் நட்சத்திரம் இது. அரண்மனை போல வீடு இருந்தாலும் அலட்டிக் கொள்ள மாட்டீர்கள். சொந்த வீடு இருந்தாலும் வாடகைக்கு விட்டு, உங்களுக்கு ஏற்றபடி சிறிய வாடகை வீட்டில் குடியிருப்பீர்கள். அக்ரஹாரத்து வீடுகள்போல முற்றம் வைத்த வீடுகளையே அதிகம் விரும்புவீர்கள். முதலில் நிலம் வாங்கி அதில் வீடாகக் கட்டலாம்; அல்லது வீடாகக் கிடைத்தால் வாங்கியும் குடிபுகலாம். ஒன்றும் பிரச்னை வராது. ஆனால், கட்டிய வீடாக வாங்கும்போது ஒன்றை நினைவில் வையுங்கள். இடத்தின் சொந்தக்காரருக்கும், வீட்டை கட்டும் பில்டருக்கும் இருக்கும் ஒப்பந்தங்கள் சரியாக உள்ளதா என்பதை சரிபார்த்துக் கொள்ளுங்கள். ஏதேனும் வில்லங்கம் உள்ளதா என்று பார்த்து விடுங்கள். அபார்ட்மென்ட்டாக இருந்தால் எந்த மாடியாக இருந்தாலும் பிரச்னையில்லை.

வாங்கும் இடம் மணல் பூமியாக இருப்பது நல்லது. பொதுவாக வேலை கிடைத்த இரண்டு, மூன்று வருடங்களில் வீடு வாங்கி விடுவீர்கள். அதாவது 24, 27 வயதுகளில் அமைந்து விடும். அதை விட்டு விட்டால் மத்திம வயதின் பிற்பகுதியில் வரும் புதன் தசையில்தான் வீட்டை வாங்குவீர்கள். பூர்வீகச் சொத்து இருந்தால் அதை பெரிதாக விரிவாக்கமெல்லாம் செய்ய மாட்டீர்கள். நீர்த்தேக்கத் தொட்டி, நீரேற்று நிலையம், மருத்துவ மனை போன்றவற்றிற்கு அருகில் வீடு அமைந்தால் நல்லது. கிடைத்தாலும் வாங்கிப் போடுங்கள். தப்பித் தவறிக்கூட அழகு நிலையத்திற்கு பக்கத்தில் வீடு கிடைத்தால் வாங்கி விடாதீர்கள். நீங்கள் வசிக்கும் ஊரின் தெற்கு, கிழக்கு பகுதியில் வீடு அமைந்தால் அதிர்ஷ்டத்தை கொடுக்கும். நீங்கள் முயற்சித்தால் அந்த திசையில் வீடோ, இடமோ உடனேயும் கிடைக்கும்.

கடக ராசியிலேயே பூச நட்சத்திரக்காரரான நீங்கள்தான் எதையும் திட்டமிட்டு செய்வதில் வல்லவர்கள். சொந்த வீடுதான் வாழ்வுரிமை என்றிருப்பீர்கள். ‘‘வீடுன்னா பிக்கல், பிடுங்கல் இல்லாம இருக்கணும். இருபத்தஞ்சு தேதிலேர்ந்து எப்போ வாடகை தருவாங்கன்னு வீட்டு ஓனரு பார்க்கக் கூடாது’’ என்று யோசிப்பீர்கள். எப்பாடுபட்டாவது ஏதாவது ஒரு இடத்தை வாங்கிக் கட்டுவதில் கறாராக இறங்கி விடுவீர்கள். உங்களில் பலருக்கு ஹவுசிங் போர்டு வீடெல்லாம் அமையும். வில்வ நகர், துளசி நகர் என்று எங்கேனும் போர்டை பார்த்தால் உடனே வாங்குவதற்காக விசாரிப்பீர்கள். ஆனாலும், உங்களுக்கு அவ்வளவு எளிதில் கையில் காசு தங்காது. உடன் பிறந்தவர்கள், நண்பர்கள் என்று கொடுத்து விட்டதால் திணறித் திணறித்தான் இடம் வாங்குவீர்கள். மரங்கள் அடர்ந்த நிழற்சாலைகளையே சுற்றிச் சுற்றி வருவீர்கள். ஏரிக்கு அருகில், நதி, ஓடை என்று இருந்தால் நூறு கிலோ மீட்டரானாலும் தேடிச் சென்று வாங்குவீர்கள்.

இடமாக வாங்கும்போது எச்சரிக்கையாக இருங்கள். அரசுக்குச் சொந்தமான இடம் மற்றும் பட்டா இல்லாமல் அனுபோக பாத்தியத்தில் இருக்கிற இடத்தையெல்லாம் நம்பி வாங்கிவிடக் கூடாது. எதற்கும் மயங்கி டோக்கன் அட்வான்ஸ் கொடுக்கக் கூடாது. ‘‘நாலு வீடு தள்ளிதான், அந்த டிவியில காலையில பேசறவங்களோட வீடு இருக்கு’’ என்று உசுப்பேத்தினால் தவிர்த்து விடுங்கள். ஏனெனில், சட்டரீதியான சான்றிதழ்கள், மற்ற விஷயங்கள் வாங்கும்போதுதான் உங்களுக்கு உண்மை தெரிய வரும். ‘‘போயும் போயும் அந்த இடத்துக்கு ஏங்க அட்வான்ஸ் கொடுத்தீங்க. அந்த இடத்துக்கு சரியான பேப்பரே இல்லை’’ என்று சொல்லக் கூடும்.

வெள்ளையும், உவர் மண்ணும் கலந்த பூமியெனில் சிறப்பாக இருக்கும். வாசலில் முல்லைக் கொடியும், போகன்வில்லாவையும் படர விடுவீர்கள். சனி பகவானின் நட்சத்திரமாக பூசம் வருகிறது. மேலும், உங்கள் வீட்டு யோகத்தை சுக்கிரன்தான் அருள்கிறார். பொதுவாகவே சனியும், சுக்கிரனும் நண்பர்களாக வருவதால் காற்றோட்டமும், தண்ணீர் வசதியும் உள்ள வீடு அமையும். நீங்கள் வசிக்கும் ஊரின் தென் மேற்கு, வட மேற்கு, வட கிழக்கு திசைகளில் வீடு இருப்பது நல்லது. இதில் தென்மேற்கு திசையை நோக்கிய தலைவாசலைத் தவிர்க்க வேண்டும். மற்ற திசையில் வைக்கலாம். ரோகிணி, ஹஸ்தம், சுவாதி, திருவோணம், ரேவதி போன்ற நட்சத்திரங்களில் புதுமனை புகுதல், பத்திரப்பதிவு போன்றவற்றை வைத்துக் கொள்ளலாம். அடுத்ததாக கடக ராசிக்குள் வரும் ஆயில்யம் நட்சத்திரம் புதனின் ஆதிக்கத்தில் வருகிறது. அதனால் அன்றாட சுகபோகங்கள் பாதிக்காத அளவிற்கு வீடு வாங்க வேண்டுமென்று விரும்புவீர்கள். அலைந்து, திரிந்து, அவஸ்தைப்பட்டு காலில் விழுந்து… கடன் வாங்கி என்பதெல்லாம் உங்களுக்கு பிடிக்காது. ‘‘அப்படியெல்லாம் வாங்க வேண்டிய அவசியமில்லை’’ என்பீர்கள்.

‘‘ஆபீஸ்ல எல்லோரும் ஒரு அபார்ட்மென்ட் புக் பண்ணியிருக்காங்களாம். எனக்கும் ஒன்று இருக்குன்னு சொன்னாங்க. அதனாலதான் ஒத்துக்கிட்டேன்’’ என்பீர்கள். இடம் வாங்கும் வரை ஏனோதானோ என்றிருப்பீர்கள். அதற்குப் பிறகுதான் முழு ஆர்வத்தோடு வேலை பார்ப்பீர்கள். எந்த இடம் வாங்குகிறீர்களோ அந்த இடத்துக்கு சொந்தக்காரரான வாரிசுதாரர்கள் கையெழுத்து போட்டிருக்கிறார்களா என்று பார்த்து வாங்குங்கள். ‘‘அண்ணன் கையெழுத்து போட்டிருக்காரு. அண்ணன் பையன் மும்பை வரைக்கும் போயிருக்காரு. அதனால போடாம விட்டுட்டான்’’ என்றெல்லாம் பிரச்னை இருந்தால் சரிசெய்துவிட வேண்டும். ஏனெனில், ‘‘எக்ஸ்ட்ரா பத்து லட்சம் கொடுக்கலைன்னா கேஸ் போடுவேன்’’ என்று அவர்கள் தரப்பிலிருந்து பின்னால் பேசக் கூடும்.

எப்போதுமே முதல் சொத்து தங்காமல் போகும். அதைக் கொடுத்துவிட்டு வேறொன்றை வாங்குவீர்கள். முதல் சொத்தை கணவன், மனைவி என்று இருவரின் பெயரிலும் பதித்து இரண்டாவது சொத்தை உங்கள் பெயருக்கு வாங்கினால் ஒன்றும் பிரச்னை வராது. 29, 30 வயதிற்குள் வீடோ, நிலமோ வாங்கி விடுவீர்கள். தனியார் வங்கிக் கடன் எனில் எவ்வித பிரச்னையும் இருக்காது. எல்லாவித மண்ணும் உங்களுக்கு நல்லதுதான் செய்யும். அபார்ட்மென்ட்டாக இருந்தால் எந்த மாடியில் வேண்டுமானாலும் வாங்கலாம். பூர்வீகச் சொத்தை தம்பி, தங்கைக்கு விட்டுக் கொடுப்பீர்கள். ‘‘சித்தப்பாவுக்கு பசங்க இல்லை. அவங்க இருக்கற வரைக்கும் இருக்கட்டும்னு விட்டுட்டேன்’’ என்பீர்கள். உங்களில் பலர், ‘‘அப்பா இருந்த இடம் கிடைச்சா நல்லது’’ என்று முயற்சிப்பீர்கள்.

பள்ளி, விளையாட்டுத் திடல், டியூஷன் சென்டர், பெட் கிளினிக், தியான மையம், தபால் நிலையம் போன்ற இடங்களுக்கு அருகில் இடம் கிடைப்பது நல்லது. எந்த இடம் வாங்கினாலும், ‘‘எனக்கு ஒண்ணும் விருப்பமில்லை. பையனுக்காகத்தான் எல்லாம்’’ என்று சொல்வீர்கள். வடக்கு, வடமேற்கு, தென்கிழக்கு திசைகளை நோக்கி தலைவாசலை அமையுங்கள். மேலும், நீங்கள் வசிக்கும் ஊரில் அந்த திசையில் வரும் இடங்கள் வந்தால் வாங்கிப்போட முயற்சியுங்கள். அஸ்வினி, மிருகசீரிஷம், மகம், அனுஷம், மூலம், அவிட்டம், உத்திரட்டாதி போன்ற நட்சத்திரங்களில் புதுமனை புகுவதையும், பத்திரப் பதிவையும் வைத்துக் கொள்ளுங்கள். உங்களின் வீட்டு யோகத்தை சுக்கிரன் அருள்கிறார். எனவே சுக்கிரனின் தலைவரான சுக்கிராச்சாரியார் பூஜித்த, தரிசித்த தலங்கள் யாவும் உங்களுக்கு உகந்தவை. அப்படிப்பட்ட ஓர் தலமே திருவெள்ளியங்குடி. சுக்கிர பகவானின் அருள்பெற விரும்பும் பக்தர்கள் இங்கே குழுமுகிறார்கள். ராமர் இத்தலத்தில் அருளாட்சி செய்கிறார். ராமரை சுக்கிராச்சார்யார் வணங்கியதே இத்தலத்தின் சிறப்பாகும். மேலும், புனர்பூசத்தின் 4ம் பாதம் கடக ராசியில்தான் ராமர் அவதரித்தார் என்பதும் கூடுதல் சிறப்பு.

மகாவிஷ்ணு வாமனாவதாரம் எடுத்து மகாபலி சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் தானமாகக் கேட்டபோது, அதை அசுர குரு சுக்கிராச்சாரியார் தடுத்தார். இவ்வாறு தானத்திற்கு இடையூறாக இருந்ததால் அவர் தன் கண்ணை இழந்தார். இத்தல நாயகனின் அருளால் சுக்கிராச்சாரியார், இழந்த பார்வையை மீண்டும் பெற்றார். சுக்கிரனுக்கு பகவான் அருளியதால் ‘சுக்கிரபுரி’ என்ற பெயரும் உண்டு. அதனால் இத்தலம் சுக்கிர தோஷ பரிகாரத் தலமாகவும் திகழ்கிறது. பிற்காலத்தில் திருமங்கையாழ்வாருக்கு ராமனாகவும் காட்சி கொடுத்தபடியால் இவரை ‘கோலவில்லி ராமன்’ என்றே குறிப்பிடுகிறார் ஆழ்வார். கும்பகோணம் -அணைக்கரை மார்க்கத்தில் சோழபுரம் என்ற இடத்திலிருந்து இந்தத் தலம் செல்லலாம். கும்பகோணத்திலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது. இத்தலத்திற்கு நீங்கள் சென்று வர நிச்சயம் உங்களின் இல்லக் கனவு விரைவில் நிறைவேறும்.

 

The post கடக ராசிக்காரர்களின் இல்லக் கனவை நனவாக்கும் ஆலயம் appeared first on Dinakaran.

Related Stories: