இந்தியில் பெயரிடப்பட்ட 3 குற்றவியல் சட்டங்களின் பெயர்களை ஆங்கிலத்தில் மாற்ற கோரி பொதுநல வழக்கு: அரசு பதில் தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: இந்தியில் பெயரிடப்பட்டுள்ள மூன்று குற்றவியல் சட்டங்களுக்கும் ஆங்கிலத்தில் பெயர் சூட்டக் கோரிய மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்குமாறு ஒன்றிய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்திய தண்டனைச் சட்டம், குற்ற விசாரணை முறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சிகள் சட்டங்களுக்கு பதிலாக, பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நகரிக் சுரக்‌ஷா சன்ஹிதா, பாரதிய சாக்‌ஷிய அதினியம் என்ற பெயர்களில் புதிய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன. இந்த சட்டங்களுக்கு இந்தியில் பெயரிடப்பட்டது சட்டவிரோதமானது என்று அறிவிக்கக் கோரி, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த விவசாயி ஜீவன்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுவை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், இந்திய அரசியலமைப்புச் சட்டம் 348வது பிரிவின்படி நாடாளுமன்றத்தின் அனைத்து குறிப்புகளும் ஆங்கிலத்தில் இடம் பெற்றிருக்க வேண்டும். இதற்கு முரணாக மூன்று சட்டங்களுக்கும் இந்தியில் பெயரிடப்பட்டுள்ளது.எனவே, மூன்று குற்றவியல் சட்டங்களுக்கும் ஆங்கிலத்தில் பெயர் சூட்ட ஒன்றிய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி கே.குமரேஷ் பாபு ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்குமாறு ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்டது. மேலும், மூன்று குற்றவியல் சட்டங்களை எதிர்த்த வழக்குகளுடன் சேர்த்து இந்த வழக்கையும் விசாரணைக்கு பட்டியலிடவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

The post இந்தியில் பெயரிடப்பட்ட 3 குற்றவியல் சட்டங்களின் பெயர்களை ஆங்கிலத்தில் மாற்ற கோரி பொதுநல வழக்கு: அரசு பதில் தர ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: