தினக்கூலி தொழிலாளர்களுக்கு 882 குறைந்தபட்ச ஊதியம் உயர்வு: அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு


சென்னை: விரைவு போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிந்து வரும் தினக்கூலி தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சமாக 882 ஊதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் தொலைதூரத்துக்கு செல்லும் வகையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் பேருந்துகளின் தேவைக்கேற்ப தினக்கூலி, ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் 535 மட்டுமே வழங்கப்பட்டது. இதற்கு தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. எனவே தினக்கூலி தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச கூலி சட்டப்படி ஊதியம் வழங்க வேண்டும் என கோரிக்கைவிடப்பட்டு பேச்சுவார்த்ைதயும் நடத்தப்பட்டது. இந்நிலையில் தினக்கூலி தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சமாக 882 ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்துக் கழக இயக்கப் பிரிவு பொதுமேலாளர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: கடந்த 9ம் தேதி நடைபெற்ற வாரிய கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையிலும், கடந்த ஆண்டு ஜன.2ம் தேதி தொழிலாளர் நலத்துறை பிறப்பித்த அரசாணையின்படியும் ஓட்டுநர், நடத்துநர் பணிகளை ஒரு சேர மேற்கொள்ளும் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியாளர்களுக்கும், தொழில்நுட்ப பணியாளர்களுக்குமான குறைந்தபட்ச ஊதியத்தில் திருத்தம் செய்யப்படுகிறது. அதன்படி நாளொன்றுக்கு ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியாளர்களுக்கு 882, தொழில்நுட்ப பணியாளர்களுக்கு 872 ஊதியமாக வழங்கப்படும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவுக்கு தொழிற்சங்கத்தினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

The post தினக்கூலி தொழிலாளர்களுக்கு 882 குறைந்தபட்ச ஊதியம் உயர்வு: அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: