சட்டமன்றத்திற்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரம்: உரிமைக்குழு மீண்டும் முடிவு எடுக்க வேண்டும்.! சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: முந்தைய அதிமுக ஆட்சியில் சட்டமன்றத்துக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரம் தொடர்பாக அப்போதைய எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீசை ரத்து செய்த தனி நீதிபதி உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என்றும் உரிமை மீறல் பிரச்னையை உரிமை குழுவே முடிவெடுக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. முந்தைய அதிமுக ஆட்சியில் சட்டமன்றத்துக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரம் தொடர்பாக அப்போதைய எதிர்க்கட்சி தலைவரும், தற்போதைய முதல்வருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீசை ரத்து செய்ததை எதிர்த்து முந்தைய ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்குகள், நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் குமரப்பன் அமர்வில் விசாரணைக்கு வந்தன.

அப்போது, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, கடந்த 2017ம் ஆண்டு அதிமுக-வில் பன்னீர்செல்வம் அணியினர் உருவானது, 18 எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு எதிராக செயல்பட்டது, அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மை வாக்கெடுப்பு நடத்தியதைச் சுட்டிக்காட்டி, ஆட்சி கவிழ்ந்து விடக் கூடும் என்ற காரணத்தால் இந்த உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அரசியலமைப்பு சட்டப்படி, பதவிக்காலம் முடிந்ததும், சட்டமன்றம் கலைந்து விடுகிறது. நிலுவையில் உள்ள மசோதாக்கள், உரிமை மீறல் உள்ளிட்ட நடவடிக்கைகள் அனைத்தும் காலாவதியாகி விடுகின்றன என்று பல்வேறு உயர்நீதிமன்ற, உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் தெரிவித்துள்ளன. தற்போதைய சட்டமன்றம் இந்த விவகாரத்தை விசாரிக்க முடியாது.

உள்நோக்கத்துடன் உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதால், இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது. முந்தைய உரிமைக் குழு தலைவராக இருந்த பொள்ளாச்சி ஜெயராமன், தற்போதும் உரிமைக்குழு உறுப்பினராக இருந்தாலும் அவர் தற்போதைய குழுவை பிரதிநிதித்துவப்படுத்த முடியாது என்று வாதிட்டார். அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், சிறப்பு அரசு பிளீடர் ஆ.செல்வேந்திரன் ஆஜராகி வாதிட்டனர். அட்வகேட் ஜெனரல் வாதிடும்போது, உரிமை மீறல் நோட்டீஸ் காலாவதியாகிவிட்டது. இந்த விஷயத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றார். பொள்ளாச்சி ஜெயராமன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகவாச்சாரி, குழுவின் பதவிக்காலம் முடிவுக்கு வந்தாலும், நிலுவையில் உள்ள நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்க வேண்டும் என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், மசோதாக்கள் காலாவதியாகலாம். ஆனால் உரிமை மீறல் போன்ற நடவடிக்கைகள் எப்படி காலாவதியாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது. அந்த நடவடிக்கைகள் முடிவுக்கு வர அனுமதிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்து இந்த வழக்கில் புதன்கிழமை பிறப்பிப்பதாக தெரிவித்தனர். இந்த நிலையில் இன்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். தீர்ப்பில், சட்டமன்ற விதிகளுக்கு உட்பட்டு உரிமை மீறல் பிரச்னையில் உரிமை குழு முடிவெடுக்க வேண்டும். மக்கள் மீது சட்டப்பேரவை மீதுள்ள மாண்பு, நம்பிக்கையை காக்க வேண்டும். எனவே, உரிமைக்குழு அனுப்பிய நோட்டீசை ரத்து செய்த தனி நீதிபதி உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. உரிமை குழு அனுப்பிய நோட்டீசுக்கு எதிர் மனுதாரர்களான 18 உறுப்பினர்களும் பதில் தர வேண்டும். அதன்மீது விதிகளுக்கு உட்பட்டு உரிமைக்குழு தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

The post சட்டமன்றத்திற்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரம்: உரிமைக்குழு மீண்டும் முடிவு எடுக்க வேண்டும்.! சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: