கூட்டணி விஷயத்தில் தெளிவான முடிவு இல்லை எடப்பாடி பழனிசாமி ஒன்றும் ஜெயலலிதா கிடையாது: ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகிகள் குமுறல்

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் தோல்வி தொடர்பாக எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் சிலர், எடப்பாடி ஒன்றும் ஜெயலலிதா அல்ல. கூட்டணி விஷயத்தில் ஒரு தெளிவான முடிவு எடுக்கப்படவில்லை என்று கூறினர். நாடாளுமன்ற தேர்தல் தோல்வி குறித்து தொகுதி வாரியாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று, திண்டுக்கல் மற்றும் திருவள்ளூர் வேட்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இதில் பங்கேற்ற நிர்வாகிகள் நாடாளுமன்ற தேர்தலின்போது அதிமுக வாக்கு வங்கி சரிந்ததற்கான காரணத்தை கூறினர். ஒரு சிலர் கட்சி தலைமையை விமர்சித்து பேசினர். ஆனால் இதுபற்றி வெளியில் தெரிவிக்க கூடாது என்று எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. கூட்டத்தில் பேசிய எடப்பாடி, “நாடாளுமன்ற தேர்தலில் இழந்த நமது வாக்கு வங்கியை மீண்டும் மீட்டெடுக்க வேண்டும். 2026 சட்டமன்ற தேர்தலில் நமது முழு பலத்தை காண்பிக்க வேண்டும். இதற்காக, ஒவ்வொரு நிர்வாகியும், களத்தில் முழு மூச்சுடன் பணியாற்ற வேண்டும். குறிப்பாக கிராமம் கிராமமாக சென்று திண்ணை பிரசாரத்தில் ஈடுபட வேண்டும். தேர்தல் கூட்டணி குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம். அதை கட்சி தலைமை பார்த்துக்கொள்ளும்” என்றார்.

எடப்பாடியின் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு வெளியே வந்த திருவள்ளூர் தொகுதி நிர்வாகிகள் சிலர் கூறும்போது, “அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நடந்த 9 தேர்தல்களில் அதிமுக தோல்வி அடைந்துள்ளது. இந்த தோல்விக்கு உண்மையான காரணம் என்ன என்பது குறித்து கட்சி தலைமை இன்னும் சரியாக புரிந்துகொள்ளவில்லை. எடப்பாடி தன்னை ஜெயலலிதா என நினைத்துக்கொண்டு இன்னும் செயல்பட்டு கொண்டிருக்கிறார். ஜெயலலிதாவுக்கு இணையாக யாரையும் ஒப்பிட முடியாது.

கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க அதிமுக மூத்த தலைவர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட ஒரு சிலர் முட்டுக்கட்டையாக இருக்கிறார்கள். கூட்டணி விஷயத்திலும் ஒரு தெளிவான முடிவு இல்லை. இனியும் கட்சி தலைமை திருந்தவில்லை என்றால் இனி வரும் எந்த தேர்தலிலும் அதிமுக வெற்றிபெற முடியாது” என்றனர். கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க அதிமுக மூத்த தலைவர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட ஒரு சிலர் முட்டுக்கட்டையாக இருக்கிறார்கள்.

The post கூட்டணி விஷயத்தில் தெளிவான முடிவு இல்லை எடப்பாடி பழனிசாமி ஒன்றும் ஜெயலலிதா கிடையாது: ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகிகள் குமுறல் appeared first on Dinakaran.

Related Stories: