ரயில்வே திட்டங்களிலும் தமிழகம் புறக்கணிப்பு பற்றி ரயில்நிலையங்களில் காங்கிரசார் துண்டுபிரசுரம் வழங்க வேண்டும்: செல்வப்பெருந்தகை வேண்டுகோள்

சென்னை: ரயில்வே திட்டங்களிலும் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதற்கு தமிழகத்தின் எதிர்ப்பை வெளிப்படுத்த அனைத்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளும் ரயில் நிலையங்கள் முன்பாக காங்கிரஸ் கொடியுடன் துண்டு பிரசுரமாக அச்சிட்டு பொதுமக்களிடம் விநியோகித்து எதிர்ப்பை காட்ட வேண்டும் என செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கை:
தேசிய ஜனநாயக கூட்டணி அரசு சமர்ப்பித்த நிதிநிலை அறிக்கை அப்பட்டமான அரசியல் பாகுபாடு காரணமாக இந்தியா கூட்டணி கட்சிகள் ஆட்சி செய்கிற தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் கடுமையாக வஞ்சிக்கப்பட்டுள்ளன. இதை கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ், திமு.க. கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தியுள்ளன. ரயில்வே துறைக்கென தனி பட்ஜெட் ரத்து செய்யப்பட்டு பொது பட்ஜெட்டோடு இணைக்கப்பட்டு, தற்போது ₹2.65 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டது என்கிற விவரம் தான் வெளிவந்தது. எதற்கு எவ்வளவு நிதி என்கிற விவரங்கள் தற்போது தான் வெளிவந்துள்ளது.

தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ₹6,362 கோடி ஒதுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது மொத்த ஒதுக்கீட்டில் 3.49 சதவீதம். ஆனால் மத்திய பிரதேசத்திற்கு ₹14,738 கோடியும் (8.08%), குஜராத்துக்கு ₹8,743 கோடி (4.79%) உத்தரபிரதேசம் ₹19,848 கோடி (10.88%), ராஜஸ்தான் ₹9,959 கோடி (5.46%), மகாராஷ்டிரா அதிகபட்சமாக ₹15,940 கோடி (8.74%), பீகார் ₹10,033 கோடி (5.50%), ஆந்திரா ₹9,151 கோடி (5.05%) என ரயில்வே திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டிலும் ஒன்றிய பாஜ அரசு பாரபட்சமாக செயல்பட்டிருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிற செயலாகும். இதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.

ஏற்கனவே ஓடிக்கொண்டிருந்த பல ரயில்கள் நிறுத்தப்பட்டிருப்பதால் தமிழக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் அறிவிக்கப்பட்ட பல ரயில்வே திட்டங்களுக்கு கடந்த 8 ஆண்டுகளாக நிதி ஒதுக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது.

தற்போது ரயில்வே திட்டங்களில் தமிழகம் எந்த அளவுக்கு பாரபட்சமாக புறக்கணிக்கப்பட்டிருக்கிறது என்பது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாகவும், தமிழக மக்கள் சார்பாகவும் கடுமையான எதிர்ப்பையும், கண்டனத்தையும் பதிவு செய்ய விரும்புகிறேன். தமிழகத்தின் எதிர்ப்பை வெளிப்படுத்த அனைத்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளும் வட்டார சர்க்கிள், நகர, பேரூர் அளவில் பெருந்திரளான மக்கள் வருகை புரிகிற ரயில் நிலையங்கள் முன்பாக காங்கிரஸ் கொடியுடன் இந்த அறிக்கையை துண்டு பிரசுரமாக அச்சிட்டு பொதுமக்களிடம் விநியோகித்து எதிர்ப்பை காட்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

கடந்த 10 ஆண்டுகால மக்கள் விரோத நடவடிக்கையின் காரணமாகவும், பாசிச போக்கினாலும் பாஜவுக்கு அறுதி பெரும்பான்மை கிடைக்காமல் மக்கள் பாடத்தை புகட்டியிருக்கிறார்கள். இரு மாநில கட்சிகளின் ஆதரவோடு மைனாரிட்டி அரசு நடத்திவரும் பிரதமர் மோடி தொடர்ந்து மக்களை அரசியல் ரீதியாக பிளவுபடுத்தி பாரபட்சமாக நிதி ஒதுக்கீடு செய்வாரேயானால் அதற்குரிய பாடத்தை மக்கள் நிச்சயம் மீண்டும் புகட்டுவார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post ரயில்வே திட்டங்களிலும் தமிழகம் புறக்கணிப்பு பற்றி ரயில்நிலையங்களில் காங்கிரசார் துண்டுபிரசுரம் வழங்க வேண்டும்: செல்வப்பெருந்தகை வேண்டுகோள் appeared first on Dinakaran.

Related Stories: