மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

 

கோத்தகிரி, ஜூலை 26: கோத்தகிரி அருகே பையங்கி பகுதியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே பையங்கி கிராமத்தில் 15 துறைகளை சேர்ந்த அரசுத்துறை அதிகாரிகள் தோட்டத்தொழிலாளர்கள், பொதுமக்களின் குறைகளை நேரில் மனுக்களாக பெற்றனர். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் பேரில் ஊரகப்பகுதிகளில் மக்களுடன் முதல்வர் என்னும் திட்டத்தில் அனைத்துத்துறை அதிகாரிகள் மக்களை சந்தித்து, கோரிக்கைகளை மனுக்களாக பெற்று தீர்வு காணப்பட்டு வருகிறது.

அதன்படி நீலகிரி மாவட்டத்தில் உள்ள நடுஹட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பையங்கி கிராமத்தில் கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் ராம்குமார் தலைமையில் மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 15 அரசு துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் நேரில் சென்று தோட்டத்தொழிலாளர்கள், விவசாயிகள், பொதுமக்கள் என 500க்கும் மேற்பட்ட மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றனர்.

இம்முகாமில் தமிழ்நாடு அரசின் மூலம் பொதுமக்களுக்கு செயல்படுத்தப்பட்டுள்ள மகளிர் உரிமை தொகை, தொழில் மையம் குறித்தும், தாட்கோ, சமூக நலத்துறை மூலம் பயனாளிகளுக்கு தையல் இயந்திரம் வழங்குவது குறித்தும் எடுத்துக்கூறப்பட்டது. கோத்தகிரி வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்ரீதர், தனி வட்டாட்சியர், பழங்குடியின தனி வட்டாட்சியர் ராஜசேகர், காவல் ஆய்வாளர் ஜெயமுருகன், நடுஹட்டி ஊராட்சி தலைவர், வருவாய் ஆய்வாளர்கள் கவிதா, சேகர், கிராம நிர்வாக அலுவலர் மோகன் குமார் உட்பட அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

The post மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் appeared first on Dinakaran.

Related Stories: