விழுப்புரம் அருகே பரபரப்பு நகை வியாபாரியின் கார், பைக்குகளை நள்ளிரவில் தீ வைத்து எரித்த கும்பல்

விழுப்புரம், ஜூலை 26: விழுப்புரம் அருகே நகை தொழிலாளியின் கார், பைக்குகள் தீ வைத்து எரித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் அருகே டி.மேட்டுபாளையத்தை சேர்ந்தவர் வீரப்பன் மகன்கள் மோகன்ராஜ், குமாரசாமி, மொத்தமாக நகை வாங்கி வந்து வடிவமைத்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகின்றனர். இவர்கள் கூட்டு குடும்பமாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களுக்கு சொந்தமான கார், 2 பைக்குகளை வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டு வாசலில் நிறுத்தி வைத்துள்ளார்.

இதனிடையே நேற்று அதிகாலை 2.30 மணியளவில் கார் மற்றும் இரண்டு பைக்குகளும் கொழுந்துவிட்டு தீப்பிடித்து எரிந்தது. தீவெளிச்சத்தை பார்த்த மோகன்ராஜ் குடும்பத்தினர் வெளியே அலறியடித்து ஓடிவந்து தீயை அணைக்க முயற்சித்தபோதும் தீயில் கார், இரண்டு பைக்குகளும் எரிந்து முற்றிலும் சேதமானது. இதுகுறித்து விழுப்புரம் தாலுகா காவல்நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, கார், பைக்கை தீ வைத்து எரித்த கும்பல் மோகன்ராஜ் வீட்டு முன்பிருந்த சிசிடிவி கேமிராவை உடைத்துவிட்டு மண்ணெண்ணெய் ஊற்றி இந்த கார், பைக்கை தீவைத்துவிட்டு தப்பியோடியது தெரியவந்தது.

தொடர்ந்து கைரேகை, தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. மேலும் மோப்பநாயும் வரவழைக்கப்பட்டு அங்கும், இங்குமாக ஓடியது. தொடர்ந்து போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் மோகன்ராஜ் குடும்பத்துக்கு சிலருடன் பிரச்னை இருந்து வந்ததாகவும் அந்த முன்விரோதத்தில் இந்த கார், பைக்குகளை தீவைத்து எரித்திருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. இதுபோன்று கடந்த 2022ம் ஆண்டு இவர்களுடைய கார் வீட்டுவாசலில் நிறுத்தியபோது தீவைக்கப்பட்டதில் காரின் டயர்கள் எரிந்து சாம்பலானது. தொடர்ந்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post விழுப்புரம் அருகே பரபரப்பு நகை வியாபாரியின் கார், பைக்குகளை நள்ளிரவில் தீ வைத்து எரித்த கும்பல் appeared first on Dinakaran.

Related Stories: