ஒன்றிய அரசின் “பி.எம். ஸ்ரீ ஸ்கூல்ஸ்” திட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த தமிழக அரசு மறுத்ததால் ரூ. 2,000 கோடி நிறுத்தம்!!

டெல்லி : ஒன்றிய அரசின் “பி.எம். ஸ்ரீ ஸ்கூல்ஸ்” திட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த தமிழக அரசு மறுத்ததால் ரூ .2,000 கோடி நிறுத்தம் என தகவல் வெளியாகி உள்ளது. ஒன்றிய அரசின் புதியக் கல்விக்கொள்கையை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று அறிவித்து மாநில கல்விக்கொள்கைக்கான குழுவை அமைத்தது தமிழக அரசு. அந்தக்குழுவின் அறிக்கை முதல்வரிடம் அண்மையில் வழங்கப்பட்டது. இதனிடையே புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் வகையில் மத்திய அரசு, பிரதம மந்திரியின் வளரும் இந்தியாவுக்கான பள்ளிகள் திட்டம்’ (Pradhan Mantri Schools For Rising India) என்ற திட்டத்தை உருவாக்கியது. கடந்த 2022, செப்டம்பர் மாதம் ஆசிரியர் தினத்தன்று, இந்தத் திட்டத்தைத் தொடங்கிவைத்தார் பிரதமர் மோடி.

பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் என்றழைக்கப்படும் அந்தத் திட்டத்தில், ‘நாடெங்கும் மத்திய, மாநில அரசுகள் நடத்தும் 14,500 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு நவீன வசதிகள் செய்யப்பட்டு புதியக் கல்விக்கொள்கையின் ஆய்வகங்களாக மாற்றப்படும். எளிமையாக சொல்ல வேண்டும் என்றால், அரசு பள்ளிகளை மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் எடுத்து, புதிய கல்வி கொள்கையில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பள்ளிகளை நடத்துவதே பி.எம். ஸ்ரீ ஸ்கூல்ஸ்” திட்டம் ஆகும்.

இந்நிலையில், பி.எம் ஸ்ரீ திட்டத்தை செயல்படுத்த தயக்கம் காட்டுவதால், தமிழகத்தின் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டமான சமக்ரா சிக்ஷா அபியான் (எஸ்.எஸ்.ஏ) திட்டத்திற்கு அனுப்ப வேண்டிய நிதியை ஒன்றிய கல்வி அமைச்சகம் நிறுத்தியுள்ளது. “பி.எம். ஸ்ரீ ஸ்கூல்ஸ்” திட்டத்தை ஏற்காததால் எஸ்.எஸ்.ஏ. திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு ஆண்டுதோறும் ஒதுக்கும் ரூ .2,000 கோடியை ஒன்றிய அரசு நிறுத்தி உள்ளது. இதனால் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ், பள்ளிக்கல்வித்துறையில் செயல்படுத்தப்படும் பல திட்டங்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதே போன்று, பி.எம் ஸ்ரீ திட்டத்தை செயல்படுத்த தயக்கம் காட்டுவதால், டெல்லி, பஞ்சாப் மற்றும் மேற்கு வங்கத்திற்கு சமக்ரா சிக்ஷா அபியான் (எஸ்.எஸ்.ஏ) திட்டத்திற்கு அனுப்ப வேண்டிய நிதியை ஒன்றிய கல்வி அமைச்சகம் நிறுத்தியுள்ளது.

The post ஒன்றிய அரசின் “பி.எம். ஸ்ரீ ஸ்கூல்ஸ்” திட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த தமிழக அரசு மறுத்ததால் ரூ. 2,000 கோடி நிறுத்தம்!! appeared first on Dinakaran.

Related Stories: