கடந்த ஜனவரி மாதம் (2024) முதல் தற்போது வரை 18 குழந்தை திருமணங்கள் தொடர்பான புகார்கள் பெறப்பட்டதை தொடர்ந்து, அவற்றின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும். 18 வயது பூர்த்தியடையாமல் கருவுற்ற பெண்குழந்தைகள் தொடர்பாக பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இரண்டு நபர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. குழந்தை திருமணம் தொடர்பாக பெறப்பட்ட புகார்கள் மீது உடன் நடவடிக்கையாக குழந்தையின் விபரம் மாவட்ட சமூகநல அலுவலகத்தின் கீழ் பணிபுரியும் சமூக நல களப்பணியாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டு, களப்பணியாளர்கள் சைல்டுலைன் பணியாளர்கள், ஒருங்கிணைந்த சேவைமையம் வழக்கு பணியாளர்கள், ஆள் கடத்தல் தடுப்புபிரிவு, காவல் ஆய்வாளர் ஆகியோர்களால் நேரடியாக குழந்தையின் இல்லத்திற்கு சென்று விசாரணை செய்யப்படும்.
குழந்தை திருமணம் நடைபெற்றதற்கான ஆதாரங்களோ, திருமணம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் ஏதேனும் செய்யப்பட்டிருப்பின் உடனடியாக குழந்தையினை மீட்டு குழந்தைகள் நல குழுமத்தியில் ஒப்படைக்கப்படும். குழந்தை திருமணம் நடைபெற்றிருப்பின் குழந்தையினை திருமணம் செய்து கொண்ட மணமகன், மணமகனின் பெற்றோர், குழந்தையின் பெற்றோர் மற்றும் திருமணம் நடைபெறுவதற்கு உடந்தையாக இருந்த அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்படும்.
இளவயதில் கருவுற்ற குழந்தைகள் தொடர்பாக புகார் பெறப்பட்டால், காரணமான நபர் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்யப்படும். குழந்தை திருமணம் தொடர்பாக 1098 மற்றும் 181 ஆகிய எண்ணில் புகார் தெரிவிக்கலாம், என சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஐகடே இ.ஆ.ப., தெரிவித்துள்ளார். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
The post குழந்தை திருமணம் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: சென்னை ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் எச்சரிக்கை appeared first on Dinakaran.