அதிக வட்டி தருவதாக கூறி ரூ.2,438 கோடி மோசடி ஆருத்ரா கோல்ட் இயக்குனரின் ஜாமீன் மனு தள்ளுபடி

சென்னை: சென்னை அமைந்தகரையை தலைமையிடமாகக் கொண்டு திருவள்ளூர், திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறு, கோயம்புத்தூர் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆருத்ரா கோல்டு டிரேடிங் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனம், தங்களிடம் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால், மாதம் ரூ.36 ஆயிரம் வட்டியாக வழங்கப்படும் என விளம்பரம் செய்தது. இதனிடையே, இந்த திட்டத்தின் மூலம் மக்களிடம் ஆசையை தூண்டி, பண மோசடியில் அந்நிறுவனம் ஈடுபடுவதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக வந்த புகார்களின் அடிப்படையில், தமிழக காவல் துறையின் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் 21 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அந்த நிறுவனம் சுமார் 1,09,255 பேரிடம் ரூ.2,438 கோடி பெற்று மோசடி செய்துள்ளது தெரியவந்தது. இந்த வழக்கு தொடர்பாக அந்நிறுவனத்தின் இயக்குநர்கள் உட்பட 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், தலைமறைவாக இருந்த நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரான ரூசோ, பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் ரூசோ ஜாமீன் வழங்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி தமிழ்செல்வி முன் விசாரணைக்கு வந்தபோது, ஜாமீன் மனுவை திரும்ப பெறுவதாக ரூசோ தரப்பில் தெரிவித்ததையடுத்து அந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

The post அதிக வட்டி தருவதாக கூறி ரூ.2,438 கோடி மோசடி ஆருத்ரா கோல்ட் இயக்குனரின் ஜாமீன் மனு தள்ளுபடி appeared first on Dinakaran.

Related Stories: