திருவாரூர், ஜுலை 9: தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசுபொறுப்பேற்ற பின்னர் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக அரசின் அனைத்து துறைகளிலும் பல்வேறு சீர்திருத்தங்கள் மற்றும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி அறநிலையத்துறையில் அமைச்சர் சேகர்பாபு மேற்பார்வையில் பல்வேறு திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக மாநிலம் முழுவதும் அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன.
அதன்படி இதுவரையில் ரூ 6 ஆயிரம் கோடிக்கும் மேற்பட்ட நிலங்கள் மீட்கப்பட்டு கோயிலுக்கு சொந்தமான இடங்கள் என பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த 3 ஆண்டு காலத்தில் மட்டும் மாநிலம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்களில் திருப்பணிகள் நடைபெற்று கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. இது மட்டுமின்றி கோயில் ஊழியர்களுக்கும் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வரும் கோயில்களை மாதந்தோறும் ஒரு முறை கோயில் வளாகம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சுத்தம் செய்ய வேண்டுமென அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டுள்ளார். அதன்படி திருவாரூர் மாவட்டத்திலும் அந்தந்த கோயில் செயல் அலுவலர்கள் மூலம் ஊழியர்கள் சுத்தம் செய்து வருகின்றனர். இதுமட்டுமின்றி சிவனடியார்கள் மற்றும் உழவார குழுவினர் மூலமும் தூய்மை பணி நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று திருவாரூர் தியாகராஜசுவாமி கோயில் வளாகத்தில் ஆஸ்தான அகத்தீஸ்வரர் உழவார பணிகள் குழுவினர் மூலம் தூய்மை பணி நடைபெற்றது.
The post தியாகராஜசுவாமி கோயிலில் மாதாந்திர தூய்மைப் பணி appeared first on Dinakaran.