மாமல்லபுரம் அருகே ஊராட்சி கோப்பை கிரிக்கெட் போட்டி: வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே கிராம ஊராட்சி சார்பில் ஊராட்சி கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. அதில் பைனலில் வெற்றி பெற்ற அணிக்கு ரூ.25 ஆயிரம் ரொக்கம் வழங்கப்பட்டது. மாமல்லபுரத்தில் இருந்து சென்னை செல்லும் இசிஆர் சாலையையொட்டி உள்ள நெம்மேலி கிராம ஊராட்சி சார்பில் கிராமப்புற கிரிக்கெட் வீரர்களை ஊக்கப்படுத்த ஊராட்சி கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி நடந்தது. இதில், நெம்மேலி ஊராட்சிக்கு உட்பட்ட 9 அணிகள் பங்கேற்றன.

இதில், முதல் 4 இடங்களைப் பிடித்த அணிகளுக்கு ரொக்கம் மற்றும் கோப்பைகள் வழங்கும் விழா நேற்று முன்தினம் மாலை நடந்தது. நெம்மேலி ஊராட்சி தலைவர் ரமணிசீமான் இறுதி போட்டியில் முதலிடம் பிடித்த புதியகல்பாக்கம் அணிக்கு ரூ.25 ஆயிரம், 2ம் இடம் பிடித்த காட்டுகுப்பம் அணிக்கு ரூ.20 ஆயிரம், 3ம் இடம் பிடித்த நெம்மேலி அணிக்கு ரூ.15 ஆயிரம், 4ம் இடம் பிடித்த பேரூர் அணிக்கு ரூ.10 ஆயிரம் ரொக்கம், கோப்பையை வழங்கி பாராட்டினார்.

அப்போது, இளைஞர்கள் கிரிக்கெட் மற்றும் பல்வேறு விளையாட்டுகள் விளையாட ஒரு மைதானம் அமைத்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து, அதிகாரிகளிடம் பேசி பரிசீலிக்கப்படும் எனவும், ஒவ்வொரு ஆண்டும் கிராமப்புற இளைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில் கிரிக்கெட் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் தொடர்ந்து நடத்தப்படும் எனவும் ஊராட்சி தலைவர் ரமணிசீமான் தெரிவித்தார்.

The post மாமல்லபுரம் அருகே ஊராட்சி கோப்பை கிரிக்கெட் போட்டி: வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு appeared first on Dinakaran.

Related Stories: