நிலஅளவை, நில ஆவணங்கள் இணையவழி சேவை விவரம்: பொதுமக்கள் அறிந்துகொள்ள வசதி

சென்னை: நிலஅளவை மற்றும் நில ஆவணங்கள் தொடர்பான இணையவழி சேவைகளின் விவரங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளலாம். இதுகுறித்து நிலஅளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த சில ஆண்டுகளில், பலவகையான நில ஆவணங்கள் கணினிப்படுத்தப்பட்டு இணையவழியில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. நில உரிமைதாரர்கள் பயனடையும் வகையில் கீழ்க்காணும் இணையவழிச்சேவைகள் நிலஅளவை மற்றும் நிலவரி திட்டத் துறையால் பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டு வருகின்றன.

1 பட்டா மாற்றத்திற்கு இணையவழி மூலம் விண்ணப்பித்தல்: கிராமப்புறம், நகர்ப்புறம் மற்றும் நத்தம் ஆகிய பகுதிகளுக்கான பட்டா மாற்றம் மேற்கொள்ள https://tamilnilam.tn.gov.in/citizen/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

2 நில உரிமைதாரர்கள் புல எல்லைகளை அளந்து காட்டக்கோருவதற்கு https://tamilnilam.tn.gov.in/citizen/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

3 எங்கிருந்தும் எந்நேரத்திலும் என்ற இணையவழி சேவையை (https://eservices.tn.gov.in) பயன்படுத்தி, கிராமப்புற மற்றும் நத்தம் நில ஆவணங்களின் பட்டா / சிட்டா , ‘அ’ பதிவேடு மற்றும் புலப்படம் ஆகியவற்றையும், நகர்ப்புற நிலஅளவை பதிவேட்டின் நகல், நகர நிலஅளவை வரைபடம் மற்றும் புல எல்லை வரைபடம் / அறிக்கை ஆகியவற்றையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் மற்றும் பட்டா மாற்றத்திற்கு அளித்த விண்ணப்பத்தின் நிலையை அறிந்து கொள்ளலாம்.

4 கிராம வரைபடங்கள் மற்றும் பழைய நிலஅளவை எண்களுக்கான புதிய நிலஅளவை எண்களின் ஒப்புமை விளக்கப்பட்டியல் போன்றவற்றை https://tnlandsurvey.tn.gov.in எனும் இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post நிலஅளவை, நில ஆவணங்கள் இணையவழி சேவை விவரம்: பொதுமக்கள் அறிந்துகொள்ள வசதி appeared first on Dinakaran.

Related Stories: