ரூ.1 லட்சம் மிரட்டி வாங்கியதால் லோடுமேன் தற்கொலை; பாஜ நிர்வாகி கைது

சாத்தூர்: அட்வான்ஸாக வாங்கிய பணத்துக்காக பாஜவை சேர்ந்த ஊராட்சி தலைவர் ₹1 லட்சம் மிரட்டி வாங்கியதால் லோடுமேன் தற்கொலை செய்து கொண்டார். விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே மேட்டமலை கிராமத்தை சேர்ந்தவர் பார்த்தசாரதி (55). மாவட்ட பாஜ முன்னாள் இணைச் செயலாளர், ஊராட்சி தலைவராக உள்ளார். இவரது தீப்பெட்டி தயாரிக்கும் கம்பெனியில் லோடுமேனாக வேலை செய்தவர் அழகுராஜ் (27). இவரை கடந்த மாதம் வேலையில் இருந்து நிறுத்திய பார்த்தசாரதி, அவர் அட்வான்ஸாக வாங்கிய பணத்தை திருப்பி தரும்படி கேட்டுள்ளார்.

பணம் கொடுக்க காலதாமதம் ஆகவே, பார்த்தசாரதி மற்றும் 2 பேர் சேர்ந்து, அழகுராஜின் வங்கிக் கணக்கில் இருந்த ₹1 லட்சத்தை மிரட்டி வாங்கியுள்ளனர். இதனால், விரக்தியடைந்த அழகுராஜ் கடந்த 2 நாட்களுக்கு முன் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்தார்.

இதுதொடர்பாக அழகுராஜ் மனைவி அபி கொடுத்த புகாரின்பேரில், சாத்தூர் நகர் போலீசார், வன்கொடுமை தடுப்புச்சட்டம் மற்றும் தற்கொலைக்கு தூண்டுதல், மிரட்டி பணம் வசூலித்தல் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிந்து, நேற்று முன்தினம் இரவு ஊராட்சி தலைவர் பார்த்தசாரதியை கைது செய்தனர்.

The post ரூ.1 லட்சம் மிரட்டி வாங்கியதால் லோடுமேன் தற்கொலை; பாஜ நிர்வாகி கைது appeared first on Dinakaran.

Related Stories: