சிறுமிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் பாதிரியார் கைது

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வெங்கடேச பாளையம் பகுதியை சேர்ந்தவர். கூலித்தொழிலாளி. இவரின் மனைவி இறந்து விட்டதால் 2 மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார். இவரின், முதல் மகள் துணிக்கடையில் வேலை செய்து வருகிறார். 14 வயதுடைய 2வது மகள் சிஎஸ்ஐ பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் உள்ள சிஎஸ்ஐ சர்ச்சில் ஒரு வாரம் தோட்ட வேலை செய்துள்ளார். அப்போது, அவரின் இளைய மகளான 14 வயது சிறுமியும் உடன் தங்கியுள்ளார்.

இந்நிலையில், கடந்த ஜன 1ம் தேதி இரவு படுத்து தூங்கிக்கொண்டிருந்தபோது, சிறுமிக்கு சிஎஸ்ஐ சர்ச் பாதிரியார் தேவஇரக்கம் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால், பயத்தில் அலறிய சிறுமி கத்தியபடி வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது. இதனால், அக்கம் பக்கத்து வீட்டினருக்கு இந்த சிறுமியை பாதிரியார் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய தகவல் கசிந்திருக்கிறது. இதனைத்தொடர்ந்து, வெங்கடேச பாளையம் பொதுமக்கள், இதுகுறித்து முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் அளித்துள்ளனர்.

முதல்வரின் தனிப்பிரிவு அதிகாரிகள், இதுகுறித்து முறையான விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுத்திட காஞ்சிபுரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கு உத்தரவிட்டனர். எனவே, மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் சக்தி காவியா, விசாரணை மேற்கொண்டு காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், வழக்குப்பதிவு செய்த காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார், சிஎஸ்ஐ சர்ச் பாதிரியார் தேவ இரக்கம் (54) மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post சிறுமிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் பாதிரியார் கைது appeared first on Dinakaran.

Related Stories: