தமிழ்நாட்டில் அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள்.. ஆயிரம் விளக்கு பகுதியில் BNS சட்டம் 304(2) என்ற பிரிவின் கீழ் முதல் வழக்கு!!

சென்னை :ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டு 164 ஆண்டுகளாக நடைமுறையில் நேற்று வரை இருந்து வந்த இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய ஆதாரச் சட்டம் ஆகியவற்றுக்கு மாற்றாக பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா, பாரதிய சாக்ஷிய அதினியம் ஆகிய மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை ஒன்றிய அரசு இயற்றியுள்ளது. எதிர்கட்சிகளின் கடுமையான எதிர்ப்புக்கு மத்தியில், மேற்கண்ட 3 புதிய சட்டங்கள் நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

இந்த நிலையில், ஒன்றிய அரசு கொண்டுவந்த புதிய குற்றவியல் சட்டங்கள் தமிழ்நாட்டில் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் முதல் வழக்குப்பதியப்பட்டுள்ளது. அப்தாப் அலி என்பவரிடமிருந்து பைக்கில் வந்த 2 பேர் மொபைல் போனை பறித்துச் சென்றதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. புதிதாக இன்று அமலுக்கு வந்துள்ள BNS சட்டம் 304(2) என்ற பிரிவின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.இதனிடையே 3 புதிய குற்றவியல் சட்டங்கள் அமலால் தமிழ்நாட்டில் ஏற்கனவே அச்சிட்ட எப்.ஐ.ஆர்களில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. IPC, Cr.P.c அச்சிட்ட பிரிவுகள் அடிக்கப்பட்டு BNSS என புதிய சட்டத்தின் பிரிவுகள் எழுதப்பட்டு வருகின்றன.

மேலும் காவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள் பின்வருமாறு..

*காவல்துறை அதிகாரிகளுக்கு ஒரு மாதம் பயிற்சி அளித்து புதிய சட்டத்தின் படி வழக்குப் பதிவு செய்ய உத்தரவு

*புதிய சட்டத்தின் அடிப்படையிலான முதல் தகவல் அறிக்கை புத்தகங்களை அனைத்து மாவட்ட காவல் அதிகாரிகளும் தலைமை அலுவலகத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.

*பழைய FIR புத்தகத்தில் புதிய சட்டத்தின் பெயரை அந்தந்த மாவட்ட காவல் அதிகாரிகளே திருத்திக் கொள்ளலாம்.

*இன்று முதல் ஒன்றுக்கும் மேற்பட்ட குற்றங்களுக்கு மட்டுமே புதிய சட்டத்தை பயன்படுத்த வேண்டும்.

*ஜூலை 1க்கு முன்பான குற்றங்கள் தொடர்பான FIR-ல் பழைய சட்டத்தின் அடிப்படையில் வழக்குப் பதிய வேண்டும்.

*இன்று முதல் புதிய சட்டத்தின்படி பதிந்த வழக்குகள் குறித்து ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தமிழ்நாட்டில் அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள்.. ஆயிரம் விளக்கு பகுதியில் BNS சட்டம் 304(2) என்ற பிரிவின் கீழ் முதல் வழக்கு!! appeared first on Dinakaran.

Related Stories: