மாமல்லபுரத்தில் 2வது நாளாக ‘‘சாகர் கவாச்’’ பாதுகாப்பு ஒத்திகை: இசிஆர் சாலையில் போலீசார் வாகன தணிக்கை

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் 2வது நாளாக நடைபெற்ற ‘‘சாகர் கவாச்’’ பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியில் இசிஆர் சாலையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். 2008ம் ஆண்டு மும்பையில் கடல் வழியாக நுழைந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து, நாடு முழுவதும் கடலோர பாதுகாப்புக்கு முக்கியதுவம் அளிக்கப்பட்டது. கடல்வழி மற்றும் கடலோர பாதுகாப்பை பலப்படுத்தும் விதமாக அவ்வப்போது அனைத்து பாதுகாப்பு துறைகளையும் ஒன்றிணைத்து பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நேற்று முன்தினம் காலை ‘‘சாகர் கவாச்’’ என்ற பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி மாமல்லபுரத்தில் தொடங்கியது. அதில், கடலோர காவல் படை போலீசாரும், மாமல்லபுரம் சட்டம் ஒழுங்கு போலீசாரும் கடலில் ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், 2வது நாளாக நேற்றும் ‘‘சாகர் கவாச்’’ பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.

தொடர்ந்து, மாமல்லபுரம் மற்றும் சுற்றுவட்டார கடற்கரை பகுதிகளில் கடலோர காவல் படை போலீசார், மாமல்லபுரம் சட்டம் ஒழுங்கு போலீசார், கியூ பிரிவு, மத்திய தொழில் பாதுகாப்பு படை உள்ளிட்ட பாதுகாப்பு படையினர் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டனர். மாமல்லபுரம் டிஎஸ்பி ரவி ஆபிராம் மேற்பார்வையில், மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில், கடலோர காவல் படை எஸ்ஐ ராஜேந்திரன் மற்றும் 10 பேர் கொண்ட காவலர்கள் படகுகளில் கடலுக்குள் ரோந்து சென்று தீவிரமாக கண்காணித்தனர். மேலும், மாமல்லபுரம் இசிஆர் நுழைவு வாயில், பூஞ்சேரி 4 முனை சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சட்டம் ஒழுங்கு போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அதில், சந்தேகத்திற்கிடமான நபர்களோ அல்லது வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் ஏதும் பிடிபடவில்ல, என்று போலீசார் தெரிவித்தனர்.

The post மாமல்லபுரத்தில் 2வது நாளாக ‘‘சாகர் கவாச்’’ பாதுகாப்பு ஒத்திகை: இசிஆர் சாலையில் போலீசார் வாகன தணிக்கை appeared first on Dinakaran.

Related Stories: