காஞ்சி மகா ருத்ரேஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழா: திரளான பக்தர்கள் தரிசனம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பிள்ளையார்பாளையம் பகுதியில், மாதனம்பாளையம் தெருவில் பழமை வாய்ந்த மாணிக்க விநாயகர் மற்றும் காமாட்சி அம்பிகை சமேத மகா ருத்ரேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. பழமையும், வரலாற்று சிறப்பும் உடைய இக்கோயில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு, மகா கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. கடந்த 15ம்தேதி யாகசாலை பூஜைகள், அனுக்கை விக்னேசுவர பூஜையுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து கோ பூஜை மற்றும் தன பூஜையும் நடைபெற்றது.

2வது நாளாக புனித நீர்க்குடங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு யாகசாலையில் வைக்கப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன. விழாவின் 3வது நாளாக முதற்கட்டமாக கோயில் வளாகத்தில் உள்ள மாணிக்க விநாயகர் கோபுரத்துக்கு சிவாச்சாரியார்களால் அதிகாலை 6.30 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர், மூலவர் மாணிக்க விநாயகருக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் காண்பிக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக 2வது கட்டமாக யாகசாலையிலிருந்து சிவாச்சாரியார்களால் புனித நீர்க்குடங்கள் மகா ருத்ரேஸ்வரர் ராஜகோபுரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு, மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. பின்னர், மூலவர் மகா ருத்ரேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன. மதியம் அன்னதானமும், மாலையில் காமாட்சி அம்பிகைக்கும், மகா ருத்ரேஸ்வரருக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. இரவு, திருக்கல்யாண கோலத்தில் சுவாமி வீதியுலாவும் நடைபெற்றது.

விழாவிற்கான ஏற்பாடுகளை மாணிக்க விநாயகர் மற்றும் மகா ருத்ரேஸ்வரர் அறக்கட்டளை நிர்வாகிகள், மாதனம்பாளையத்தெரு சிவனடியார்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இணைந்து செய்திருந்தனர். விழாவில் மதுரை ஆதீனம் கலந்துகொண்டு பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். இதில் காஞ்சிபுரம் மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ், முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம், வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோயில் செயல் அலுவலர் செந்தில்குமார் உள்ளிட் பலர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஸ்ரீபெரும்புதூர் : இதேபோல் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வல்லக்கோட்டை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சந்தியம்மன் கோயிலில் நேற்று முன்தினம் காலை கணபதி பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. விழாவையொட்டி, நவகிரகம் ஹோமம், லட்சுமி ஹோமம், மகா தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து நேற்று காலை 10 மணியளவில் மேளதாளம் முழங்க கோயில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் விழா சிறப்பாக நடைபெற்றது.

பின்னர், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை காண்பிக்கப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் சந்தியம்மன் காட்சியளித்தார். இதில் வல்லக்கோட்டை, வல்லம், மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

The post காஞ்சி மகா ருத்ரேஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழா: திரளான பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.

Related Stories: