நீட் நுழைவுத் தேர்வில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளது – காங். தலைவர் மல்லிகார்ஜூன கார்கே

டெல்லி: நீட் நுழைவுத் தேர்வில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளது. மோடி அரசின் தவறான நடவடிக்கையால் நீட் தேர்வு எழுதிய 24 லட்சம் மாணவர்கள் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார். மேலும் நீட் தேர்வு முறைகேடு குறித்து உச்சநீதிமன்ற மேற்பார்வையில் நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் கார்கே தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது; “நீட் தேர்வில் கிரேஸ் மார்க் மட்டும் பிரச்சனை இல்லை. முறைகேடுகள் நடந்துள்ளன, ஆவணங்கள் கசிந்துள்ளன, ஊழல் நடந்துள்ளது. மோடி அரசின் நடவடிக்கையால் நீட் தேர்வெழுதும் 24 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

தேர்வு மையத்துக்கும், பயிற்சி மையத்துக்கும் இடையே நெக்ஸஸ் உருவாகி, ‘பணம் கொடு, பேப்பர் எடு’ என்ற விளையாட்டு நடந்து வருகிறது. மோடி அரசாங்கம் தனது நடவடிக்கைகளின் பொறுப்பை என்டிஏவின் தோள்களில் சுமத்தி அதன் பொறுப்பை தட்டிக்கழிக்க முடியாது.நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோருகிறது.

விசாரணைக்குப் பிறகு, குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும், லட்சக்கணக்கான மாணவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் மற்றும் அவர்களின் ஆண்டுகள் வீணாகாமல் காப்பாற்றப்பட வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில், காகித கசிவு மற்றும் மோசடியால் கோடிக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தை மோடி அரசு சீரழித்துள்ளது” என தெரிவித்துள்ளார்.

The post நீட் நுழைவுத் தேர்வில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளது – காங். தலைவர் மல்லிகார்ஜூன கார்கே appeared first on Dinakaran.

Related Stories: