மம்தா பானர்ஜியின் பெண் சிங்கப் படை! : அதிக பெண் எம்.பி.க்களை கொண்ட கட்சி என்ற பெருமையை பெற்றது திர்ணாமுல் காங்கிரஸ்!!

கொல்கத்தா : நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அதிக பெண் எம்.பி.க்களை கொண்ட கட்சி என்ற பெருமையை பெற்றது திர்ணாமுல் காங்கிரஸ் கட்சி. மக்களவை தேர்தலில் மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் திர்ணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற 29 வேட்பாளர்களில் 11 பேர் பெண்கள் ஆவர். மஹூவா மொய்த்ரா, சஜ்டா அஹ்மத், மலா ராய், சாயோனி கோஷ், ஷர்மிளா சர்கார், ஜூன் மாலியா, ரச்சா பானர்ஜி, சடாப்தி ராய், பிரனடி சுஷில் குமார், பிரியங்கா ஜார்கிஹோலி, சுதா ராமகிருஷ்ணன், சுஜாதா மண்டல் ஆகிய 12 பேர் போட்டியிட்ட நிலையில் சுஜாதா மண்டல் மட்டும் 5,567 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி உள்ளார். மீதம் உள்ள 11 பெண் வேட்பாளர்களும் வெற்றி பெற்று எம்பிக்கள் ஆகி உள்ளனர்.

இதனிடையே 18வது மக்களவை தேர்தலில் மொத்தம் 73 பெண்கள் வெற்றி பெற்றுள்ளனர். இது 2019ல் தேர்ந்தெடுக்கப்பட்ட 78 பேரில் இருந்து 5 எண்ணிக்கை குறைவு ஆகும். 11 பெண் எம்.பி.க்களுடன் மேற்கு வங்கம் முன்னணியில் உள்ளது. இந்த தேர்தலில் மொத்தம் 797 பெண் வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டனர். பாஜ சார்பில் 30 பேரும், காங்கிரஸ் சார்பில் 14, திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் 11, சமாஜ்வாதி கட்சி சார்பில் 4, திமுக சார்பில் 3, ஐக்கிய ஜனதா தளம் 3, எல்ஜேபி(ஆர்) 2 பெண்களும் வெற்றி பெற்றனர். 17வது மக்களவையில் 78 பெண் எம்பிக்களும், 16 வது மக்களவையில் 64 பெண் எம்பிக்களும், 15வது மக்களவையில் 52 பெண் எம்பிக்களும் தேர்வு செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post மம்தா பானர்ஜியின் பெண் சிங்கப் படை! : அதிக பெண் எம்.பி.க்களை கொண்ட கட்சி என்ற பெருமையை பெற்றது திர்ணாமுல் காங்கிரஸ்!! appeared first on Dinakaran.

Related Stories: