பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் பக்தர்கள் விட்டுச்சென்ற துணி கழிவுகள் அகற்றம்: மணிமுத்தாறு பட்டாலியன் போலீசார் நடவடிக்கை

வி.கே.புரம்: பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் பக்தர்கள் விட்டுச் சென்ற துணி கழிவுகளை மணிமுத்தாறு பட்டாலியன் போலீசார் அகற்றினர்.நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் வரலாற்று சிறப்பு மிக்க பாபநாச சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் பரிகாரம் செய்து தாமிரபரணி ஆற்றில் புனித நீராடி தங்களுடைய ஆடைகளை களைந்து தண்ணீரில் விட்டு செல்கின்றனர்.

இதனால் தாமிரபரணி ஆறு மாசுபடுவதோடு துணிகள் குளிப்பவர்களின் காலில் சிக்கி ஆபத்தை ஏற்படுத்துகிறது. இந்த துணிகளை களைந்து போடுவதற்காக ஆற்றங்கரையில் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் பக்தர்கள் அதை புறக்கணித்து ஆற்றினுள்ளேயே தொடர்ந்து துணிகளை களைந்து போட்டு செல்கின்றனர்.

இதையடுத்து தன்னார்வ அமைப்புகள் மற்றும் நகராட்சி நிர்வாகம் சார்பில் அவ்வப்போது ஆற்றினுள் குவிந்து கிடக்கும் துணி கழிவுகளை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஒவ்வொரு முறையும் டன் கணக்கில் துணி கழிவுகள் அகற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மணிமுத்தாறு பட்டாலியன் 9ம் அணி தளவாய் கார்த்திகேயன் வழிகாட்டுதலின்படி மணிமுத்தாறு பட்டாலியன் 12ம் அணி உதவித் தளவாய் ரவி முன்னிலையில் பாபநாசம் ஆற்றங்கரையோரத்தில் பொதுமக்களால் ஆற்றில் விடப்பட்ட பழைய துணிகள், பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றும் பணியில் மணிமுத்தாறு பட்டாலியன் போலீசார் ஈடுபட்டனர். ஆற்றிலிருந்து சேகரிக்கப்பட்ட பழைய துணி கழிவுகள் மூட்டை கட்டி அகற்றப்பட்டது.

 

The post பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் பக்தர்கள் விட்டுச்சென்ற துணி கழிவுகள் அகற்றம்: மணிமுத்தாறு பட்டாலியன் போலீசார் நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: