குடிநீர் பிரச்னையை தீர்க்க உடனடியாக நடவடிக்கை: பாமக எம்எல்ஏக்கள் தேர்தல் ஆணையத்தில் மனு

சென்னை: மக்களின் குடிநீர் பிரச்னையை தீர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக எம்எல்ஏக்கள் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்தனர். சென்னை தலைமை செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை பாமக எம்எல்ஏக்கள் வெங்கடேசன் (தர்மபுரி), சதாசிவம் (மேட்டூர்) ஆகியோர் நேற்று சந்தித்து மனு அளித்தனர். பின்னர் அவர்கள் அளித்த பேட்டி: பருவமழை பொய்த்து விட்டதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆழ்துளை கிணறுகள் ஆயிரம் அடிக்கு கீழ் சென்று விட்டதால் குடிநீருக்கு மட்டுமின்றி மற்ற பயன்பாட்டிற்கும் நீரின்றி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கால்நடைகளுக்கும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. லாரிகள் மூலம் குடிநீர் விலைக்கு வாங்கி பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

குடிநீர் பிரச்னை உள்ள இடங்களில் நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான பணிகளை காலதாமதம் ஏற்படாமல் செய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உடனடி வாகனங்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும். தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி பூட்டப்பட்டுள்ள எம்எல்ஏக்கள் அலுவலகத்தை, மக்கள் நலன் கருதி திறக்க வேண்டும். சட்டமன்ற உறுப்பினருக்கான நிதியில் இருந்து மக்களின் குடிநீர் பிரச்னையை தீர்க்க நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை மேற்கொள்ளவும் அனுமதி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தலைமை தேர்தல் அதிகாரியிடம் மனு அளித்துள்ளோம்.

The post குடிநீர் பிரச்னையை தீர்க்க உடனடியாக நடவடிக்கை: பாமக எம்எல்ஏக்கள் தேர்தல் ஆணையத்தில் மனு appeared first on Dinakaran.

Related Stories: