காங். தேர்தல் அறிக்கை குறித்து விமர்சிப்பதா? ராஜ்நாத் சிங், தனது கண்ணியத்தை குறைத்து கொள்ளலாமா?: ப.சிதம்பரம் சாடல்

புதுடெல்லி: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து விமர்சித்துள்ள ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங், தனது கண்ணியத்தை குறைத்து கொள்ள கூடாது என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார். பிரதமர் மோடியின் ராஜஸ்தான் பேச்சு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிரதமர் மோடிக்கு ஆதரவாக பாஜ தலைவர்கள் குரல் கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கிரேட்டர் நொய்டாவில் வாக்கு சேகரித்தபோது பேசுகையில், ‘சகோதர, சகோதரிகளே எனக்கு பிரதமரை நீண்ட நாட்களாக தெரியும்.

அவருடன் எனக்கு நீண்ட காலம் நல்ல தொடர்பு இருந்து வருகிறது. அவர் இந்து, முஸ்லிம், கிறிஸ்துவம் என மதத்தின் பேரில் எப்போதும் அரசியல் செய்ததே இல்லை. நமது பிரதமர் சமூகத்தை பிளவுபடுத்த ஒருபோதும் நினைத்தது இல்லை. மன்மோகன் சிங் இந்தியாவின் பிரதமராக இருந்தார். நான் இன்றும் அவரை மதிக்கிறேன். அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் கடந்த 2006 டிசம்பர் 9ம் தேதி பேசிய மன்மோகன் சிங், ‘நாட்டின் வளங்களில் யாருக்கேனும் முன்னுரிமை இருப்பின், அது சிறுபான்மையினருக்குத்தான்.. குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு தான் என்று கூறியிருந்தார்” என்று தெரிவித்திருந்தார்.

இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறுகையில், ‘ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங் போன்ற நிதானமான அரசியல்வாதி பொய் பேசுவது எனக்கு ஏமாற்றம் அளிக்கிறது. ‘பொதுமக்களின் சொத்துகளை பறித்து, ஊடுருவல்காரர்களுக்கு பிரித்து கொடுப்போம் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது’ என்று அவர் சொல்கிறார். தேர்தல் அறிக்கையில் அப்படி எங்கே சொல்லி இருக்கிறோம்? எந்த பக்கத்தில் படித்தீர்கள் என்று ராஜ்நாத்சிங்கை கேட்க விரும்புகிறேன். ஒருவேளை, கண்ணுக்கு தெரியாத மையில் பேய்கள் எழுதிய எதையாவது அவர் படித்தாரா? அப்பட்டமான பொய்களை பேசி, ராணுவ அமைச்சர், தனது கண்ணியத்தை குறைத்து கொள்ளக்கூடாது’ என்றார்.

The post காங். தேர்தல் அறிக்கை குறித்து விமர்சிப்பதா? ராஜ்நாத் சிங், தனது கண்ணியத்தை குறைத்து கொள்ளலாமா?: ப.சிதம்பரம் சாடல் appeared first on Dinakaran.

Related Stories: