மதிப்பெண், சீனியாரிட்டி முறையில் பதவி உயர்வு டிஎன்பிஎஸ்சி கோரிக்கை உச்ச நீதிமன்றம் ஏற்பு

புதுடெல்லி: மதிப்பெண் மற்றும் சீனியாரிட்டி முறையில் பதவி உயர்வு வழங்குவது தொடர்பான வழக்கில் டி.என்.பி.எஸ்.சி நிர்வாகத்தின் கோரிக்கையை ஏற்பதாக தெரிவித்த உச்ச நீதிமன்றம், விசாரணையை மே.8ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி மற்றும் டிஆர்பி போன்ற தேர்வு முகமைகள் மூலம் போட்டித் தேர்வின் அடிப்படையில் நேரடியாக நியமிக்கப்படும் ஊழியர்கள் உட்பட அனைவருக்கும் கடந்த 2003ம் ஆண்டு முதல் அரசு பணியில் உள்ளவர்களுக்கு பணிமூப்பு மற்றும் பதவி உயர்வுக்கும் சுழற்சி முறையில் இடஒதுக்கீடு முறை செயல்படுத்தப்பட்டு வந்தது. இதையடுத்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘‘டி.என்.பி.எஸ்.யில் மதிப்பெண் மற்றும் பணி மூப்பு தகுதியின் அடிப்படையில் தான் பதவி உயர்வுகள் வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தது.

மேற்கண்ட உத்தரவை நடைமுறைப் படுத்தவில்லை எனக்கூறி மனுதாரர்கள் தரப்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், நான்கு மாதத்தில் பணிகளை முடிக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு செப்டம்பர் 26ம் தேதி அறிவுறுத்தி இருந்தது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது டி.என்.பி.எஸ்.சி நிர்வாகத்தின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் அமித் ஆனந்த் திவாரி மற்றும் குமணன் ஆகியோர், ‘‘இந்த விவகாரத்தில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. சுமார் ஒரு லட்சத்து 38ஆயிரம் ஊழியர்களின் கொண்ட பிரச்சனை ஆகும். இருப்பினும் தற்போது வரையில் எடுக்கப்பட்டவை குறித்து வேண்டுமானால் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்கிறோம் என்று தெரிவித்தனர். இதையடுத்து டி.என்.பி.எஸ்.சி நிர்வாக தரப்பு வழக்கறிஞர்களின் கோரிக்கையை ஏற்பதாக தெரிவித்த நீதிபதிகள், வழக்கின் விசாரணை மே.8ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

The post மதிப்பெண், சீனியாரிட்டி முறையில் பதவி உயர்வு டிஎன்பிஎஸ்சி கோரிக்கை உச்ச நீதிமன்றம் ஏற்பு appeared first on Dinakaran.

Related Stories: