பூச்சிக் கொல்லி மருந்து அதிகம் இந்திய மசாலாக்களுக்கு சிங்கப்பூர், ஹாங்காங்கில் தடை: விளக்கம் கேட்டு ஒன்றிய அரசு நோட்டீஸ்

புதுடெல்லி: எம்டிஎச், எவரெஸ்ட் ஆகிய இந்திய மசாலாக்களுக்கு சிங்கப்பூர், ஹாங்காக்கில் தடை விதிக்கப்பட்டது தொடர்பாக இந்திய தூதரக அதிகாரிகள் விளக்கம் அளிக்க ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. எவரெஸ்ட், எம்டிஎச் ஆகிய நிறுவனங்கள் சாம்பார், சிக்கன், மீன், மட்டன் உள்பட பல்வேறு மசாலா பொருள்களை தயாரித்து வருகின்றன. இந்தியாவை சேர்ந்த இந்த நிறுவனங்களின் தயாரிப்புகள் உள்நாடு மட்டுமின்றி பல்வேறு வௌிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் எவரெஸ்ட்டின் மீன் மசாலாவில் பூச்சிக் கொல்லி மருந்தான எத்திலீன் ஆக்சைடு அதிகம் உள்ளதாக கூறி அந்த மசாலாவுக்கு சிங்கப்பூர் அரசு கடந்த வாரம் தடை விதித்தது. இதேபோல் எம்டிஎச்சின் தயாரிப்புகளில் எத்திலீன் ஆக்சைடு அதிகம் உள்ளதாக கூறி அதன் இறக்குமதிக்கு ஹாங்காங் தடை விதித்துள்ளது. இந்த தயாரிப்புகளை விற்க வேண்டாம் எனவும் ஹாங்காங் அரசு அறிவித்துள்ளது.

இதையடுத்து இந்திய மசாலாக்களுக்கு தடை விதித்திருப்பது தொடர்பாக சிங்கப்பூர், ஹாங்காங் நாடுகளிலுள்ள இந்திய தூதரக அதிகாரிகள் விளக்கம் அளிக்க ஒன்றிய வர்த்தக அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. “நிராகரிப்புக்கான மூல காரணம், தொழில்நுட்ப விவரங்கள், பகுப்பாய்வு அறிக்கைகள், சரக்குகள் நிராகரிக்கப்பட்ட ஏற்றுமதியாளரின் விவரங்கள்” உள்ளிட்டவை கோரப்பட்டுள்ளதாக அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post பூச்சிக் கொல்லி மருந்து அதிகம் இந்திய மசாலாக்களுக்கு சிங்கப்பூர், ஹாங்காங்கில் தடை: விளக்கம் கேட்டு ஒன்றிய அரசு நோட்டீஸ் appeared first on Dinakaran.

Related Stories: