இதற்காக நேற்று முன்தினம் மாலை கள்ளழகர் வேடத்தில் தங்கப் பல்லக்கில் மதுரையை நோக்கி புறப்பட்டார். கோயில் வெளிப்பிரகாரத்தில் உள்ள பதினெட்டாம்படி கருப்பணசாமி கோயில் வாசலில் சிறப்பு பூஜைக்கு பின், அங்கிருந்து புறப்பட்டு, பொய்கைக்கரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன்திருப்பதி, சுந்தர்ராஜன்பட்டி, கடச்சனேந்தல், வழியாக இரவு முழுவதும் பல்வேறு மண்டகப்படியில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்தார். நேற்று அதிகாலையில் மூன்றுமாவடிக்கு வருகை தந்த கள்ளழகரை மதுரையில் லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் எதிர்கொண்டு வரவேற்று அழைத்து வந்தனர். இதனைத் தொடர்ந்து கோ.புதூர், ரிசர்வ்லைன், தல்லாகுளம் பகுதியில் எதிர்சேவை நடைபெற்றது. அதனை தொடர்ந்து இரவு 9.30 மணிக்கு தல்லாகுளம் பிரச்சன்ன வெங்கடாஜலபதி கோயிலுக்கு வந்தார்.
இன்று (ஏப். 23) அதிகாலை 2.30 மணிக்கு தல்லாகுளம் பிரச்சன்ன வெங்கடாஜலபதி கோயிலில் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை அணிந்து கொண்டு, தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றை நோக்கி புறப்பட்டார். வழியில் உள்ள கருப்பணசுவாமி கோயில் அருகே ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளி பின்பு காலை வைகை ஆற்றில் இறங்கினார். இந்நிலையில் மதுரை சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் வைகையில் இறங்கும் நிகழ்வின்போது 23 பேர் காயமடைந்துள்ளனர். கூட்ட நெரிசல் உள்ளிட்ட காரணங்களால் 23 பேர் காயமடைந்து சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
The post மதுரை சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் வைகையில் இறங்கும் நிகழ்வின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 23 பேர் காயம் appeared first on Dinakaran.