பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண் நேருவுக்கு ஆதரவாக அமைச்சர் கே.என்.நேரு வாக்கு சேகரிப்பு..!!

திருச்சி: தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவுபெறும் நிலையில், பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண் நேருவுக்கு ஆதரவாக அமைச்சர் கே.என். நேரு லால்குடி ரவுண்டானா பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அவருடன் திமுகவினர் மற்றும் கூட்டணி கட்சியினர் இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. இன்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடையவுள்ள நிலையில், வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடக்கூடிய அருண் நேரு, பெரம்பலூர் நாடாளுமன்றத்திற்கு உட்பட்ட திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியில் தன்னுடைய இறுதி நாள் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். லால்குடி ரவுண்டானா பகுதியில் இந்த பிரச்சாரம் தொடங்கப்பட்டது. அவருக்கு ஆதரவு தெரிவித்து நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரும், திமுகவின் முதன்மை செயலாளருமான கே.என்.நேரு லால்குடி பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதையடுத்து லால்குடி ரவுண்டானா பகுதியில் இருந்து இருசக்கர வாகன பேரணியானது தொடங்கப்பட்டது.

இதில் திமுக, கூட்டணி கட்சியை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். லால்குடி ரவுண்டானா பகுதியில் தொடங்கிய பேரணி, லால்குடி சட்டமன்ற தொகுதி முழுவதும் நடைபெறுகிறது. தொடர்ந்து மணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி, முசுரி சட்டமன்ற தொகுதி, குளித்தலை சட்டமன்ற தொகுதி, துறையூர் சட்டமன்ற தொகுதி என நடைபெற்று இறுதியாக இன்று மாலை பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் பிரச்சாரம் நிறைவடையவுள்ளது. இதைத்தவிர பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடக்கூடிய அதிமுக வேட்பாளர், பாஜக சார்பில் போட்டியிடக்கூடிய இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் உள்ளிட்டோரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

The post பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண் நேருவுக்கு ஆதரவாக அமைச்சர் கே.என்.நேரு வாக்கு சேகரிப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: