அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ்கள்: வாகன ஓட்டிகள் கடும் அவதி

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் அதிமுக தேர்தல் பிரசாரத்தில் இரண்டு ஆம்புலன்ஸ்கள் வாகன நெரிசலில் சிக்கின. மேலும், அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக போட்டியிடும் பெரும்பாக்கம் ராஜசேகர், கூட்டணி கட்சிகளான தேமுதிக, புரட்சி பாரதம் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் இணைந்து காயராம்பேடு ஊராட்சியில் பிரசாரத்தை நேற்று முன்தினம் துவங்கின.

அதனையடுத்து கல்வாய், குண்ணவாக்கம், அஞ்சூர், வீராபுரம், வல்லம், மேலமையூர், ஓமலூர் என 15க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். இதில், காட்டாங்கொளத்தூர் அதிமுக ஒன்றிய செயலாளர் சம்பத்குமாரின் சொந்த கிராமமான வல்லம் மேலையூர்‌ ஊராட்சியில் செங்கல்பட்டு – திருக்கழுக்குன்றம் சாலையில் கல்பாக்கம், திருக்கழுக்குன்றம், மாமல்லபுரம், திருப்போரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வரக்கூடிய முக்கிய சாலையில் மக்களை கூட்டிவைத்து கொண்டு நீண்ட நேரம் காக்கவைத்து பிரசாரம் செய்ததால் இருபுறமும் சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவிற்கு 1 மணி நேரத்திற்கும் மேலாக நேற்று முன்தினம் இரவு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ஆத்திரம் அடைந்த வாகன ஓட்டிகள் காது கிழியும் அளவிற்கு நீண்ட நேரம் ஒலி எழுப்பியவாறு இருந்தனர். அதுமட்டுமின்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் இருந்து திருப்போரூர் நோக்கி சென்ற ஆம்புலன்ஸ் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்த சம்பவம் அறங்கேறியது. ஆம்புலன்ஸ்க்கு வழி விடாமல் அதிமுகவினர் கடும் போக்குவரத்து நெரிசலில் ஏற்படுத்தியதால் வாகன ஓட்டிகள் கடும் கோபத்துடன் காத்து நின்றனர்.

The post அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ்கள்: வாகன ஓட்டிகள் கடும் அவதி appeared first on Dinakaran.

Related Stories: