பாஜவை தோற்க வைத்து விட்டு ஓபிஎஸ், டிடிவியுடன் அண்ணாமலை தனிக்கட்சி

நாகர்கோவிலில் உள்ள குமரி கிழக்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் அக்கட்சியின் அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது: 2024 நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு அதிமுக இருக்காது என்று பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பேசி வருகிறார். அரைவேக்காடு தனமாக பேசுகிறார். அதிமுகவின் வரலாறு அவருக்கு தெரியாது. ஒரு தேசியக் கட்சி, மாநில கட்சிகளை அழித்து விடுவேன் என்று பேசி வெற்றி பெற்றதாக சரித்திரம் இல்லை.

கச்சத்தீவு பற்றி இப்போது வாய் கிழிய பேசும் அண்ணாமலை, கடந்த 10 ஆண்டுகளாக சுப்ரிம் கோர்ட்டில் உள்ள வழக்கு விசாரணையை வேகப்படுத்த ஏன் நடவடிக்கை எடுக்க வில்ைல. முதலில் தனது கையில் கட்டி இருந்த வாட்சுக்கு முறையான பதில் சொல்ல முடியாதவர், இன்னும் தன்னை ஒரு போலீஸ் அதிகாரியாகவே நினைத்துக் கொண்டு உளவுத்துறையை கைது செய்வேன் என்று பேசுகிறார். அதிமுகவை அழித்து விடுவேன் என்று பேசுபவர்களின் நிலை என்ன ஆகும் என்பது அண்ணாமலை வழியாக தெரிய வரும்.

தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சிக்கு தோல்வியை வாங்கி கொடுத்து விட்டு, தனிக்கட்சி தொடங்க அண்ணாமலை திட்டமிட்டுள்ளார். அவரது கட்சியில், ஓ.பன்னீர் செல்வம், டிடிவி தினகரன் இணைய இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா தோல்விக்கான பெருமை அண்ணாமலையை சேரும். நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு அண்ணாமலை எங்கு இருக்கிறார் என்பதே தெரியாத நிலை ஏற்படும்.

தமிழ்நாட்டில் மக்கள் பாரதிய ஜனதாவை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இல்லை. எத்தனை முறை பிரதமர் மோடி இங்கு வந்தாலும் அவர்களின் எண்ணம் பலிக்காது. இதற்கு அண்ணாமலையும் ஒரு காரணம். அதிமுகவை பற்றி பேச அண்ணாமலைக்கு எந்த தகுதியும் இல்லை. இந்த தேர்தலில் மக்கள், பாரதிய ஜனதாவுக்கு பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

The post பாஜவை தோற்க வைத்து விட்டு ஓபிஎஸ், டிடிவியுடன் அண்ணாமலை தனிக்கட்சி appeared first on Dinakaran.

Related Stories: