கொளுத்தும் வெயிலில் 4 மணி நேரம் காத்திருந்ததால் அமித்ஷா ரோடு ஷோவில் மயங்கி விழுந்த பெண்கள்

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ஜ. வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி பா.ஜ. வேட்பாளர் நந்தினி ஆகியோரை ஆதரித்து, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நாகர்கோவில் – திருவனந்தபுரம் சாலையில் தக்கலை பழைய பஸ் நிலையம் முதல் மேட்டுக்கடை சந்திப்பு வரை சுமார் 1 கி.மீ. தூரம் பகல் 11.50க்கு தொடங்கிய பகல் 12.30 மணி வரை ரோடு ஷோ நடத்தினார்.

அப்போது அமித்ஷா பேசுகையில், ‘தமிழ் மொழி, தமிழ் பண்பாடு, தமிழகத்தின் மரியாதையை தேசம் முழுவதும் மட்டும் அல்ல, உலகம் முழுவதும் கொண்டு செல்ல பிரதமர் மோடி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். உங்களிடத்தில் தமிழில் பேசமுடியவில்லை என்பது எனக்கு வருத்தமாக இருக்கிறது. 3 ஆண்டுகளுக்குள் தமிழ் கற்று, இதே இடத்தில் நான் தமிழில் பேச முயற்சிப்பேன்,’ என்றார்.

அமித்ஷாவின் ரோடு ஷோவுக்காக நாகர்கோவில் – திருவனந்தபுரம் சாலையில் நேற்று காலை 10 மணியில் இருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அமித்ஷா கார் செல்லும் பாதைகள் மற்றும் ரோடு ஷோ நடந்த சாலையில் உள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. போக்குவரத்து மாற்றத்தால், நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரத்தில் உள்ள விமான நிலையம், மருத்துவமனைக்கு சாலை வழி மார்க்கமாக செல்ல வேண்டியவர்கள் பெரும் பாதிப்படைந்தனர். அமித்ஷா நிகழ்ச்சி காலை 9 மணி என திட்டமிடப்பட்டு அறிவித்திருந்தனர். இதனால் காலை 8 மணிக்கே தொண்டர்களை அழைத்து வந்திருந்தனர்.

குறிப்பாக குழந்தைகளுடன், பெண்கள் வந்திருந்தனர். ஆனால் ரோடு ஷோ நிகழ்ச்சி பகல் 11.50க்கு தான் தொடங்கியது. சுமார் 4 மணி நேரம் வெயிலில் மக்கள் காத்திருந்தனர். பெண்கள் சிலர் மயக்கம் அடைந்தனர். அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். குடி தண்ணீர் வசதி கூட செய்ய வில்லை. கடைகளும் அடைக்கப்பட்டு இருந்ததால், அவசர தேவைக்கு தண்ணீர் கூட வாங்க முடியாமல் மக்கள் அவதிப்பட்டனர். தங்களை அழைத்து வந்த நிர்வாகிகளை பெண்கள் ஆவேசமாக தேடினர். ஆனால் நிர்வாகிகள் நிகழ்ச்சி முடிந்ததும் ஓட்டம் பிடித்தனர்.

The post கொளுத்தும் வெயிலில் 4 மணி நேரம் காத்திருந்ததால் அமித்ஷா ரோடு ஷோவில் மயங்கி விழுந்த பெண்கள் appeared first on Dinakaran.

Related Stories: