10 ஆண்டுகால பாஜக ஆட்சி படுதோல்வி அடைந்துவிட்டதை மக்கள் உணரத் தொடங்கி விட்டார்கள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை : 10 ஆண்டுகால பாஜக ஆட்சி படுதோல்வி அடைந்துவிட்டதை மக்கள் உணரத் தொடங்கி விட்டார்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சி.எஸ்.டி.எஸ் என்ற லோக் நீதி அமைப்பு கடந்த 1995 முதல், தேர்தலின் போதும் தேர்தலுக்கு நடுவிலும் முக்கிய பிரச்சனைகள் குறித்து மக்களிடம் கருத்து கணிப்பு நடத்தி முடிவுகளை வெளியிட்டு வருகிறது. 5 முக்கிய பிரச்சனைகளை முன்வைத்து அண்மையில் நடத்தப்பட்ட கருத்து கணிப்புகளின்படி 27% பேர் வேலையின்மையே முக்கிய பிரச்சனை என்றும் 23% பேர் விலைவாசி உயர்வே முக்கிய பிரச்சனை என்றும் தெரிவித்துள்ளனர். நாட்டின் வளர்ச்சியே முக்கிய பிரச்சனை என 13% பேரும், ஊழலே முக்கிய பிரச்சனை என 8% பேரும் கூறியுள்ளனர். கடந்த 5 ஆண்டுகளில் ஊழல் அதிகரித்துவிட்டதாகவும் 55% மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் சி.எஸ்.டி.எஸ் கருத்து கணிப்பு முடிவுகளை மேற்கோள் காட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், “புகழ்பெற்ற லோக் நீதி சிஎஸ்டிஎஸ் ஆய்வு அமைப்பு, 2024 மக்களவைத் தேர்தலில் முக்கியப் பிரச்சினைகள் எவை என மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளது.

அதில்,

27% பேர் வேலையில்லா திண்டாட்டம் தான் முக்கியப் பிரச்சினை என்றும்,

23% பேர் விலைவாசி உயர்வு என்றும்,

55% பேர் கடந்த 5 ஆண்டு பாஜக ஆட்சியில் ஊழல் அதிகரித்துவிட்டதாகவும்,

ஏழை மக்களில் 76% பேர் விலைவாசி உயர்வே இத்தேர்தலில் முக்கியப் பிரச்சினை என்றும் கூறியுள்ளனர்.

இதில் இருந்தே இந்த பாஜக ஆட்சியின் முடிவுக்கான Countdown ஆரம்பம் ஆகிவிட்டது.

அதிகரித்துவிட்ட ஊழல், கார்ப்பரேட்டுகளிடமே மீண்டும் மீண்டும் குவியும் செல்வம், தொடரும் பாகுபாடுகள் என மக்களின் அன்றாட வாழ்வாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில், பத்தாண்டுகால பாஜக ஆட்சி படுதோல்வி அடைந்துவிட்டதை மக்கள் உணரத் தொடங்கி விட்டார்கள்.

‘சிலரைச் சில காலம் ஏமாற்றலாம்; எல்லோரையும் எப்போதும் ஏமாற்ற முடியாது!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post 10 ஆண்டுகால பாஜக ஆட்சி படுதோல்வி அடைந்துவிட்டதை மக்கள் உணரத் தொடங்கி விட்டார்கள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Related Stories: