1983-87 கால கட்டங்களில் பவர்புல் அமைச்சராக இருந்தார். எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு ஜானகி அம்மாள் அமைச்சரவையிலும் அதன் பிறகு ஜெயலலிதா அமைச்சரவையிலும் அமைச்சராக பணியாற்றியவர். அ.தி.மு.க.வில் இருந்து ஆர்.எம்.வீரப்பன் நீக்கப்பட்ட பிறகு எம்.ஜி.ஆர். கழகம் என்ற கட்சியை நடத்தி வந்தார். அதன் பிறகு முன்னாள் முதல்வர் கலைஞருடன் நெருக்கமாக இருந்தார். தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்தும் போட்டியிட்டார். வயதான காரணத்தால் அரசியலில் இருந்து விலகியே இருந்தார்.
சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே திருமலை பிள்ளை வீதியில் உள்ள வீட்டில் வசித்து வந்த ஆர்.எம்.வீரப்பன் நடுவில் சில ஆண்டுகள் கோபாலபுரத்தில் புது வீடு கட்டி அங்கு வசித்து வந்தார். அதன் பிறகு மீண்டும் திருமலைப் பிள்ளை தெருவில் உள்ள வீட்டுக்கு வந்து விட்டார். சுவாசக் கோளாறு காரணமாக பாதிக்கப்பட்ட ஆர்.எம்.வீரப்பன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவரது உடல் நிலை நேற்று முன்தினம் மோசம் அடைந்தது. இதனால் மதியம் அவரது உயிர் பிரிந்தது. தகவலறிந்ததும் அனைத்து கட்சித் தலைவர்கள், நடிகர், நடிகைகள், திரையுலக பிரபலங்கள் ஏராளமானோர் ஆர்.எம்.வீரப்பன் வீட்டுக்கு சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
ஆர்.எம். வீரப்பன் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்தது. ஏராளமான பொது மக்கள், தொழிலதிபர்கள், திரையுலக பிரபலங்கள் அரசியல் கட்சியினர் நேற்று அஞ்சலி செலுத்தினார்கள். ஆர்.எம். வீரப்பனின் உடல் நேற்று மாலை 5 மணி அளவில் ஊர்வலமாக நுங்கம்பாக்கம் மின் மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. இந்த ஊர்வலத்தில் ஜெகத்ரட்சகன், திருநாவுக்கரசர் எம்.பி. உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். ஊர்வலம் மின் மயானம் சென்றடைந்ததும், நுங்கம்பாக்கம் மின் மயானத்தில் அவரது உடலுக்கு 78 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
The post 78 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் ஆர்.எம்.வீரப்பன் உடல் தகனம் appeared first on Dinakaran.