வறட்சி நீடித்து வருவதால் தமிழ்நாட்டிற்கு உடனடியாக தண்ணீர் திறந்து விட முடியாது: கர்நாடக அரசு திட்டவட்டம்

பெங்களூரு: கர்நாடகாவில் வறட்சி நீடித்து வருவதால் தமிழ்நாட்டிற்கு உடனடியாக தண்ணீர் திறந்து விட முடியாது என்று காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் கர்நாடகா தரப்பு பதில் அளித்துள்ளது. நீர் இருப்பு மற்றும் சூழலைக் கருத்தில் கொண்டு மட்டுமே தண்ணீர் திறக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டது. முன்னதாக 3.6 டி.எம்.சி. தண்ணீரை உடனே திறந்து விட தமிழ்நாடு தரப்பில் முறையீடு செய்யப்பட்டது.

டெல்லியில் 29-வது காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் தொடங்கியது. தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். தமிழ்நாடு நீர்வளத்துறை செயலர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்பிரமணியம், பட்டாபிராமன் பங்கேற்றுள்ளனர். பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே-ல் கர்நாடகம் தர வேண்டிய 10 டி.எம்.சி. காவிரி நீரை முழுமையாக திறந்து விட தமிழ்நாடு வலியுறுத்த உள்ளது.

பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் 5 டி.எம்.சி. காவிரி நீரை கர்நாடகம் தந்திருக்க வேண்டும். ஆனால் 2 மாதங்களிலும் 1.5 டி.எம்சி தண்ணீர் மட்டுமே கர்நாடகம் திறந்து விட்டுள்ளது. நிலுவையில் உள்ள 3.5 டி.எம்.சி நீர், ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான நீரையும் திறக்க உத்தரவிடுமாறு கோரிக்கை வைக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என தமிழ்நாடு அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

கர்நாடகாவை பொறுத்தவரையில் பெங்களூருவில் குடிநீர் பிரச்சனையால் கூடுதல் நீர் தேவை என்பதால் தொடர்ந்து தண்ணீர் தர முடியாது என கர்நாடக அரசு கூற திட்டமிட்டுள்ளது. கர்நாடக அணைகளில் நீர் இருப்பு உள்ளதால் தொடர்ந்து தண்ணீர் திறந்து விடலாம் என வலியுறுத்த தமிழ்நாடு முடிவு செய்திருக்கிறது. இதையடுத்து காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நிறைவு பெற்றது.

இந்த கூட்டத்தின் முடிவை பொறுத்தவரையில் தமிழ்நாடு அரசு தெரிவித்த 3.5 டி.எம்.சி நீரை திறக்க முடியாது என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. நீர் இருப்பு மற்றும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க முடியும் எனவும் கர்நாடக அரசு தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post வறட்சி நீடித்து வருவதால் தமிழ்நாட்டிற்கு உடனடியாக தண்ணீர் திறந்து விட முடியாது: கர்நாடக அரசு திட்டவட்டம் appeared first on Dinakaran.

Related Stories: