தமிழச்சி தங்கபாண்டியன் ஒட்டுமொத்த தமிழ்நாடு உரிமைக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து வருகிறார்: செல்வப்பெருந்தகை பேச்சு

சென்னை: தமிழச்சி தங்கபாண்டியன் தென்சென்னை தொகுதிக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழ்நாடு உரிமைக்காக நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.சென்னை சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்குப்பட்ட கோட்டூர்புரத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில், தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் த.சுமதி (எ) தமிழச்சி தங்கபாண்டியனை‌ ஆதரித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பிரச்சாரம் செய்தார்.

அப்போது செல்வப்பெருந்தகை பிரச்சாரத்தில் பேசியதாவது:
தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் ஒரு அபூர்வமான வேட்பாளர், தென்சென்னை தொகுதி மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழகத்திற்கான உரிமைக்காக நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். அவரைப்போல் ஒரு வேட்பாளர் கிடைப்பதற்கு தென்சென்னை மக்கள் புன்னியம் செய்திருக்க வேண்டும். நமது தமிழ்நாடு முதல்வர் கொண்டு வந்த திட்டங்களால் பயன்பெறாத குடும்பங்களே இருக்க முடியாது. திமுக அரசு நிறைவேற்றிய திட்டங்களை விளக்கி, குறைந்தது 7 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தமிழச்சி தங்கபாண்டியன் வெற்றி பெறுவார்.

மேலும், எதிர் கட்சியினர் எதை சொல்லி வாக்கு சேகரிக்க போகின்றனர் என தெரியவில்லை. ஒருவர் விரோதி மற்றொருவர் துரோகி. அதாவது, தமிழ்நாட்டின் உரிமைகளை பரித்த மோடி‌ நமது விரோதி, தமிழ்நாட்டின் உரிமைகளை விட்டுக் கொடுத்த துரோகி எடப்பாடி. இவ்வாறு அவர் பேசினார்.

பிரச்சாரத்தில், பெருநகர சென்னை மாநகராட்சி துணை மேயர் மு.மகேஷ்குமார், சைதாப்பேட்டை தொகுதி‌ திமுக தேர்தல் பொறுப்பாளர் கோவி.லெனின், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் முத்தழகன், திமுக பகுதிச் செயலாளர் திரு.துரைராஜ், வட்டச் செயலாளர்கள், காங்கிரஸ் நிர்வாகிகள், முன்னணியினர் கலந்துகொண்டனர்.

The post தமிழச்சி தங்கபாண்டியன் ஒட்டுமொத்த தமிழ்நாடு உரிமைக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து வருகிறார்: செல்வப்பெருந்தகை பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: