நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு சேலத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வாக்கு சேகரிப்பு!.

சேலம்: சேலத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நடைப்பயணத்தின் சென்று வாக்கு சேகரித்தார். நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசார பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பேசி வருகிறார்.

அதன்படி சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் இன்று சனிக்கிழமை மாலை 6 மணிக்கு இந்தியா கூட்டணி சார்பில் பிரமாண்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சேலம் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி, கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் மலையரசன் ஆகியோரை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். முன்னதாக தர்மபுரியில் நேற்று இரவு நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து கார் மூலமாக சேலத்திற்கு வந்தார்.

அப்போது அவருக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்நிலையில் இன்று சேலம் அக்ரஹாரம் பகுதியில் நடைபயணமாக சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதிகாலை நடைப்பயிற்சிக்கு பின்னர் மார்க்கெட் பகுதிக்கு சென்ற முதலமைச்சர், அங்குள்ள பொதுமக்களை சந்தித்து பேசினார். தொடர்ந்து திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியை ஆதரித்து வாக்கு சேகரித்தார். பின்னர் இன்று மாலை தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் பேசுகிறார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு சேலத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வாக்கு சேகரிப்பு!. appeared first on Dinakaran.

Related Stories: