உப்பட்டி சுகாதார நிலையம் அருகே தெருவிளக்குகள் இல்லாததால் பாதிப்பு


பந்தலூர்: பந்தலூர் அருகே உப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இதில் உப்பட்டி, நெள்ளியாளம், குந்தலாடி, அம்மங்காவு, பொன்னானி, நெல்லியாளம் அரசு தேயிலை தோட்ட பகுதி, ஏலமன்னா, புஞ்சவயல், ஒளிமடா அத்திகுன்னா, பெருங்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சார்ந்த பொதுமக்கள் மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு சாதாரண நோய்களுக்கு சிகிச்சை பெறுவதோடு விபத்து மற்றும் இதர அவசர சிகிச்சைகள் பெறுவதற்காகவும், பிரசவம் உள்ளிட்ட தேவைகளுக்காகவும் இந்த மருத்துவமனைக்கு இரவு நேரங்களிலும் நோயாளிகள், கர்ப்பிணிகள் வந்து செல்கின்றனர்.

வனபகுதியையொட்டி மருத்துவமனை அமைந்துள்ளதால் இப்பகுதியில் இரவு நேரங்களில் வனவிலங்கு தொல்லையும் உள்ளது. ஆனால், மருத்துவமனை சுற்றியுள்ள பகுதிகளில் தெருவிளக்கு வசதிகள் எதுவும் இல்லாததால் இரவு நேரங்களில் சிகிச்சைக்கு வருவோரும் மிகவும் அச்சமுடன் செல்லும் நிலை உள்ளது. மேலும், மருத்துவமனையில் தங்கி சிகிச்சை அளிக்கும் பணியாளர்களும் அச்சமுடன் தங்கி இருக்கும் சூழலும் ஏற்பட்டுள்ளது. எனவே, உப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் தொழிற்பயிற்சி மையம் செல்லும் பகுதிகளில் நகராட்சி சார்பில் தெருவிளக்கு அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post உப்பட்டி சுகாதார நிலையம் அருகே தெருவிளக்குகள் இல்லாததால் பாதிப்பு appeared first on Dinakaran.

Related Stories: