ஓடும் பேருந்தில் டிரைவருக்கு வலிப்பு: 40 பயணிகள் உயிர் தப்பினர்

 

பாகூர், மார்ச் 23: திருக்கனூர் பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ் (33). தனியார் பஸ் டிரைவர். நேற்று காலை இவர் புதுச்சேரியில் இருந்து பண்ருட்டி வழித்தடத்தில் பேருந்தை ஓட்டிச்சென்றார். பேருந்தில் 40க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். பாகூர் ஏரிக்கரை சாலை சந்திப்பு அருகே சென்றபோது, ஓட்டுனருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது. இதனால் பேருந்து தாறுமாறாக ஓடியது. பயணிகள் பயத்தில் அலறினர். நடத்துனர் அழகப்பன், பயணிகள் சிலர் உதவியுடன் ஓட்டுனர் அருகே சென்று, பிரேக் போட்டு பேருந்தை சாமர்த்தியமாக நிறுத்தினர்.

இதனால் பயணிகள் காயமின்றி தப்பித்தனர். இதற்கிடையே எதிரே வந்த மற்றொரு தனியார் பேருந்தில் இருந்த ஓட்டுனர் ஒருவர் அந்த பேருந்தில் ஏறி, பாகூர் அரசு மருத்துவமனைக்கு ஓட்டிச்சென்று மோகன்ராஜை அனுமதித்தார். அங்கு டாக்டர்கள் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

The post ஓடும் பேருந்தில் டிரைவருக்கு வலிப்பு: 40 பயணிகள் உயிர் தப்பினர் appeared first on Dinakaran.

Related Stories: