உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜ கோயில் ஆழித் தேரோட்டம் கோலாகலமாக தொடங்கியது

திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜ கோயில் ஆழித் தேரோட்டம் தொடங்கியது. திருவாரூர் தியாகராஜசுவாமி கோயிலின் ஆழித்தேர் ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரியது. 30 அடி உயரம், 30 அடி அகலத்தில் 300 டன் எடையுடன் தேர் ஆடி அசைந்தாடி வருவது கண்கொள்ளா காட்சியாகும். இக்கோயில் விழாக்களில் பங்குனி உத்திர விழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்தாண்டு விழாவுக்கான பந்தல்கால் முகூர்த்தம் கடந்த ஜனவரி 25ம் தேதி நடைபெற்றது. மஹாத்துவஜா ரோகணம் எனும் கொடியேற்றம் கடந்த மாதம் 27ம் தேதி நடைபெற்றது.

ஆழித்தேரில் தியாகராஜசுவாமி எழுந்தருளும் நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது. தனக்கே உரிய அஜபா நடனத்துடன் விட்டவாசல் வழியாக தியாகராஜசுவாமி தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் தேரில் தியாகராஜருக்கு இரவு சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்நிலையில் இன்று திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் ஆழித் தேரோட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஆழித் தேரில் தியாகராஜ சுவாமி எழுந்தருளிய நிலையில் தேரோட்டம் நடைபெற்று வருகிறது. பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு நடைபெறும் தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர். திருவாரூர் ஆழித் தேரோட்டத்திற்கு முன்பாக விநாயகர், சுப்ரமணியர் தேரோட்டம் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு எஸ்.பி ஜெயக்குமார் தலைமையில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். ஆழித்தேரோட்ட விழாவையொட்டி நாளை திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நகரை சுற்றி இயங்கி வரும் டாஸ்மாக் கடைகளும் மூடப்பட உள்ளது.

The post உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜ கோயில் ஆழித் தேரோட்டம் கோலாகலமாக தொடங்கியது appeared first on Dinakaran.

Related Stories: