நரசிம்மசுவாமி கோயிலில் பங்குனி தேர்த்திருவிழா

 

நாமக்கல், மார்ச் 19: நாமக்கல் நரசிம்ம சுவாமி கோயில் பங்குனி தேர்த்திருவிழா, கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாமக்கல் நரசிம்மர் கோயிலில் பங்குனி தேர்த்திருவிழா, நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நாமகிரி தாயாருக்கும், நரசிம்மருக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, நாமகிரி தாயார் கோயில் வளாகத்தில் உள்ள கொடிக்கம்பத்திற்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, கொடிக்கம்பத்தில் பட்டாச்சாரியார்கள் கொடியேற்றினர். விழாவையொட்டி, நாளை காலை திருமஞ்சனம் நடைபெறும். இரவு சிம்ம வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெறும்.

20ம் தேதி அனுமந்த வாகனம், 21ம் தேதி கருட வாகனம், 22ம் தேதி சேஷ வாகனம், 23ம் தேதி யானை வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெறுகிறது. வரும் 24ம் தேதி மாலை 6 மணிக்கு நரசிம்மர், நாமகிரி தாயார் திருக்கல்யாண உற்சவம், குளக்கரை மண்டபத்தில் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வரும் 26ம் தேதி காலை 8.30 மணிக்கு நரசிம்மர் சுவாமி கோயில் தேரோட்டம் நடைபெறுகிறது. மாலையில் ரங்கநாதர், ஆஞ்சநேயர் கோயில் தேரோட்டம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை, கோவில் அறங்காவலர் குழு தலைவர் நல்லுசாமி, அறங்காவலர்கள் செல்வசீராளன், மல்லிகா குழந்தைவேல், ராம ஸ்ரீனிவாசன், ரமேஷ்பாபு மற்றும் கோயில் உதவி கமிஷனர் இளையராஜா மற்றும் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

The post நரசிம்மசுவாமி கோயிலில் பங்குனி தேர்த்திருவிழா appeared first on Dinakaran.

Related Stories: