பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் விண்ணப்பிக்க வாய்ப்பு

சிவகங்கை, மார்ச் 17: சிவகங்கை கலெக்டர் ஆஷாஅஜித் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் முதலமைச்சர் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் தகுதியுடைய பயனாளிகள் உரிய சான்றுகளுடன் இ-சேவை மையங்களில் விண்ணப்பித்து பயன்பெறலாம். இத்திட்டத்தில் பயன்பெற ஆண் வாரிசு இல்லை என்பதற்கான சான்று, வருமானச் சான்று (குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000க்குள் இருத்தல் வேண்டும்), ஒரு பெண் குழந்தை அல்லது இரண்டு பெண் குழந்தையுடன் குடும்ப நல அறுவை சிகிச்சை செய்த சான்று (தாய் அல்லது தந்தை 40வயதிற்குள் குடும்ப நல அறுவை சிகிச்சை செய்து கொண்டவராக இருத்தல் வேண்டும்),

இரண்டாவது பெண் குழந்தை பிறந்த மூன்று ஆண்டுகளுக்குள் விண்ணப்பித்தல் வேண்டும் (ஒரு பெண் குழந்தையுடன் குடும்ப கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்டவராக இருந்தால் பெண் குழந்தை பிறந்த மூன்று ஆண்டுகளுக்குள் விண்ணப்பித்தல் வேண்டும்). இரண்டு பெண் குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ், இருப்பிடச் சான்று(பெற்றோர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்), சாதிச் சான்றிதழ், பெண் குழந்தையின் தாய் மற்றும் தந்தையின் வயது சான்று, குடும்ப புகைப்படம், தாய் மற்றும் தந்தையின் குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டை ஆகிய சான்றுகள் இணைக்க வேண்டும். உரிய ஆவணங்களுடன், இத்திட்டத்திற்கு விண்ணப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் விண்ணப்பிக்க வாய்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: