கீரனூர் பகுதியில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது

புதுக்கோட்டை, மே 15: புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து இரு சக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்தவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவரிடமிருந்து 3 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் வீரப்பட்டி மேட்டுக்களத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவர் தனது இரு சக்கர வாகனத்தை கீரனூர் பேருந்து நிலையம் அருகே நிறுத்தி சென்றார். அப்போது திருடு போனது. அதேபோல், அகரப்பட்டி பெருங்காபட்டியைச் சேர்ந்த வெங்கடேஸ்வரன் என்பவர் இரு சக்கர வாகனம் நார்த்தாமலை முத்து மாரியம்மன் கோவில் அருகே திருட்டு போனது.

கிள்ளுக்கோட்டை வட்ட கிராம நிர்வாக அலுவலர் கோபிபாண்டி, இரு சக்கர வாகனம் கீரனூர் ரயில் நிலையத்தில் திருட்டு போனது. இது தொடர்பாக கடந்த இரு மாதங்களில் காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. இவற்றை தொடர்ந்து பாலசுப்பரமணி, பாலமுத்து உள்ளிட்ட 4 போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்தத் தனிப்படையினர், நேற்று கிள்ளுக்கோட்டை சாலையிலுள்ள ரயில்வே கேட் அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியே இரு சக்கர வாகனத்தில் வந்த குளத்தூர் வட்டம் ஆயிப்பட்டியைச் சேர்ந்த நாகமுத்து மகன் ராஜீவ் (39) என்பவரைப் பிடித்து விசாரணை நடத்தினர். காவல்துறையினரின் விசாரணையில் மூன்று வாகனங்களையும் திருடியதை அவர் ஒப்புக்கொண்டார். இதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு, நேற்று புதுக்கோட்டை மாவட்டச் சிறையில் அடைக்கப்பட்டார்.

The post கீரனூர் பகுதியில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது appeared first on Dinakaran.

Related Stories: