நாகர்கோவில் அருந்ததியர் தெரு மக்கள் பட்டா கேட்டு வீடுகளில் உள்ளிருப்பு போராட்டம்

நாகர்கோவில், மார்ச் 16: நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் பட்டா கேட்டு உள்ளிருப்பு போராட்டம் நடத்திய பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது. நாகர்கோவில் மாநகராட்சி 14-வது வார்டு அருந்ததியர் தெருவில் வசிக்கும் மக்கள் தங்களது வீடுகளுக்கு பட்டா வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த பகுதியில் 250 வீடுகள் உள்ளன. இதுதொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் மனுவும் அளித்துள்ளனர். மேலும் பட்டா கேட்டு பல்வேறு ஆர்ப்பாட்டங்களும் நடத்தி வந்தனர். இந்த நிலையில் அருந்ததியர் தெருவில் அப்பகுதி மக்கள் நேற்று காலை பட்டா கேட்டு திடீரென்று தங்கள் வீடுகளில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த வடசேரி போலீசார் அருந்ததியர் காலனி சென்று விசாரணை மேற்கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்கள் வசிக்கும் வீடுகளுக்கு பட்டா வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கண்டன கோஷங்கள் எழுப்பினர். போராட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அங்கு போராட்டம் நடந்து வருகிறது.

The post நாகர்கோவில் அருந்ததியர் தெரு மக்கள் பட்டா கேட்டு வீடுகளில் உள்ளிருப்பு போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: