ஆளுநர் டெல்லி சென்றார்

சென்னை: சென்னை விமானநிலையத்தின் உள்நாட்டு முனையத்தில் இருந்து நேற்று காலை 6.50 மணியளவில் விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் மூலமாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி 3 நாள் பயணமாக புதுடெல்லி புறப்பட்டு சென்றார். அவருடன் ஆளுநரின் செயலாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் சென்றுள்ளனர். புதுடெல்லியில் இருந்து வந்த அவசர அழைப்பின்பேரில் ஆளுநர் ஆர்.என்.ரவி சென்றதாக கூறப்படுகிறது. புதுடெல்லியில் 3 நாள் தங்கியிருக்கும் அவர், அங்கு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்து அவசர ஆலோசனை நடத்தவிருப்பதாக கூறப்படுகிறது.

பின்னர் வரும் 16ம் தேதி மதியம் 12.40 மணியளவில் புதுடெல்லியில் இருந்து ஏர்இந்தியா பயணிகள் விமானம் மூலமாக ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னை திரும்புகிறார். முன்னாள் அமைச்சர் பொன்முடி தொடர்பான வழக்கில், அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளதைத் தொடர்ந்து அவர் மீண்டும் எம்எல்ஏ ஆனார். இதையடுத்து அவருக்கு மீண்டும் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்கும்படி ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் கடிதம் எழுதினார். இதையடுத்து ஒன்றிய உள்துறை அமைச்சர் மற்றும் அரசு அதிகாரிகள், சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்துவதற்காக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று புதுடெல்லி புறப்பட்டு சென்றதாக கூறப்படுகிறது.

The post ஆளுநர் டெல்லி சென்றார் appeared first on Dinakaran.

Related Stories: