காரைக்குடியில் வீடுகளை அகற்றுவதை கைவிட வேண்டும்: பொதுமக்கள் வலியுறுத்தல்

 

சிவகங்கை, மார்ச் 5: காரைக்குடியில் பல தலைமுறைகளாக குடியிருந்து வருவோர் வீடுகளை அகற்ற முயற்சிப்பதை கைவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. சிவகங்கையில் தமிழ்நாடு அடிமனை பயனாளிகள் குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாவட்ட பேரவைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் விஸ்வநாதன் முன்னிலை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் அண்ணாத்துரை மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

காரைக்குடி சூடாமணிபுரம் பகுதியில் 771 பேருக்கு இடம் ஒதுக்கி தரப்பட்டது. இதில் 125 பேருக்கான இடத்தை பொதுப் பயன்பாட்டுக்கான இடமாக ஒதுக்குகிறார்கள். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு பொது பயன்பாட்டுக்கு என்பது அந்த பகுதியில் குடியிருந்து வருகிறவர்களுக்கு தெரியாது. இங்கு குடியிருப்பவர்களுக்கு சாலை வசதி, மின்சார இணைப்பு, குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, ஆதார் கார்டு என அனைத்தும் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 50ஆண்டுகளுக்கு முன் பொதுப்பயன்பாட்டிற்கு ஒதுக்கப்பட்டது எனக்கூறி தற்போது இங்கு குடியிருந்து வரும் ஏழை, எளிய மக்களின் வீடுகளை அகற்ற முயற்சிக்கும் நடவடிக்கையை நிறுத்த வேண்டும். மாவட்ட நிர்வாகம், காரைக்குடி நகராட்சி நிர்வாகமும் இங்கு குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

The post காரைக்குடியில் வீடுகளை அகற்றுவதை கைவிட வேண்டும்: பொதுமக்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: