தஞ்சாவூர், மார்ச் 4: ஆடுதுறை தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிறுவனத்தில் புளிச்சை மற்றும் சணப்பு பயிர்களில் மேம்படுத்தப்பட்ட உற்பத்தி தொழில்நுட்பங்கள் விதை உற்பத்தி, நார் தயாரித்தல் மற்றும் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்தல் குறித்த பயிற்சி நடைபெற்றது.
கொல்கத்தாவில் உள்ள இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழக சணல் மற்றும் சார்பு நார் பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிதி உதவியுடன் இப்பயிற்சி நடைபெற்றது. தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் முனைவர் சுப்ரமணியன் பயிற்சியை துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில்,புளிச்சை மற்றும் சணப்பு பயிர்களின் பொருளாதார முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார். நிகழ்ச்சியில் வேளாண் விரிவாக்கம் பேராசிரியர் அருணாசலம், பயிர் நோயியல் பேராசிரியர் ராஜப்பன், பயிர் மரபியல் பேராசிரியர் மணிமாறன், பூச்சியியல் இணை பேராசிரியர் ஆனந்தி, பயிர் மரபியல் உதவி பேராசிரியர் புஷ்பா, மண்ணியல் உதவி பேராசிரியர் முத்துக்குமாரராஜா, தோட்டக்கலை உதவி பேராசிரியர் அருள் ஆனந்த் ஆகியோர் தொழில் நுட்பங்கள் குறித்து உரையாற்றினர்.
நிகழ்வில் சணப்பு மற்றும் புளிச்சை நார் தயாரிப்புக்கேற்ற ரகங்களின் விதைகள் மற்றும் நார்களில் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் மற்றும் பல்வேறு அம்சங்ளைக் கொண்ட கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இதில் தஞ்சாவூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களைச் சார்ந்த சுமார் 100 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். மேலும், விவசாயிகளுக்கு விதை நேர்த்தி, வரிசை விதைப்பு மற்றும் களையெடுக்கும் கருவி பயன்படுத்துதல் குறித்த வயல்வெளி செயல்விளக்கம் இத்திட்ட விஞ்ஞானிகளான உழவியல் இணை பேராசிரியர் நாகேஸ்வரி, பயிர் மரபியல் உதவி பேராசிரியர் அருள் மொழி ஆகியோர் நிகழ்த்தினர். இதில் நிறுவனத்தின் அனைத்து விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
The post ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிறுவனத்தில் மதிப்புக்கூட்டு பொருட்கள் தயாரித்தல் குறித்து பயிற்சி appeared first on Dinakaran.